Sunday, February 8, 2015

ஒளி ஆண்டு - வானவியல் அலகு


ஒரு ஒளி ஆண்டு (Light Year) என்பது எத்தனை நாட்களைக் கொண்டது?

கேள்வியே தவறானது. ஒளி ஆண்டு என்பது காலத்தைக் கணக்கிடும் அலகு (Unit) அல்ல. அது தூரத்தைக் கணக்கிடும் ஒரு அலகு.

ஒளியின் வேகமானது வெற்றிடத்தில் நொடிக்கு 2,99,792.458 கிலோமீட்டர்கள். தோராயமாக நொடிக்கு 3 இலட்சம் கிலோமீட்டர்கள் என்று சொல்லலாம். அப்படிப்பட்ட வேகத்தில் ஒளி ஒரு ஆண்டிற்கு எத்தனை தொலைவு பயணித்திருக்கும் என்று பார்த்தால் அதுவே ஒரு ஒளியாண்டு தூரம் எனப்படும்.

  • 1 நொடிக்கு = 299,792.458 கிலோமீட்டர்கள்
  • 1 நிமிடத்திற்கு = 299,792.458 x 60
    • = 17,987,547.48 கிலோமீட்டர்கள்
  • 1 மணிக்கு = 17,987,547.48 x 60
    • = 1,079,252,848.80 கிலோமீட்டர்கள்
  • 1 நாளைக்கு = 1,079,252,848.80 x 24
    • = 25,902,068,371.20 கிலோமீட்டர்கள்
  • 1 வருடத்திற்கு = 25,902,068,371.20 x 365.242
    • = 9,460,523,256,033.83 கிலோமீட்டர்கள்

அதாவது, ஒன்பது ட்ரில்லியன் நானூற்றி அறுபது பில்லியன் ஐநூற்றி இருபத்தி மூன்று மில்லியன் இருநூற்றி ஐம்பத்தாறு ஆயிரத்து முப்பத்து மூன்று (nine trillion four hundred sixty billion five hundred twenty-three million two hundred fifty-six thousand thirty-three) கிலோமீட்டர்கள்.

சுருக்கமாக = 9.4605284 × 1012 கிலோமீட்டர்கள்

தோராயமாக 9.46 ட்ரில்லியன் கிலோமீட்டர்கள் என்பதே ஒரு ஒளியாண்டு தூரமாகும்.

வானவியல் அலகு (Astronomical Unit-AU)

1 வானவியல் அலகு = 149,597,871 கிலோமீட்டர்கள்

அதாவது, பூமியின் மையப்பகுதிக்கும் சூரியனின் மையப்பகுதிக்கும் இடைப்பட்ட தொலைவே ஒரு வானவியல் அலகு எனப்படும். பூமியானது சூரியனை ஒரு ஒழுங்கான வட்டத்தில் சுற்றி வராது நீள்வட்டப்பாதையில் சுற்றி வந்தாலும், தோராயமான ஒரு மதிப்பை நாம் வானவியல் அலகாகக் கொள்கிறோம்.

பூமியானது தன் நீள்வட்டப்பாதையில் சூரியனுக்கு அருகே வரும் அண்மைநிலையின் (perehelion) போது இருக்கும் தொலைவையும், சூரியனுக்குத் தொலைவே இருக்கும் சேய்மை நிலையில் (aphelion) போது இருக்கும் தொலைவையும் கூட்டி அதனை இரண்டால் வகுத்து வரும் மதிப்பே இந்த வானவியல் அலகு.

சூரிய ஒளியானது பூமிக்கு வந்து சேர 8.3 நிமிடங்கள் ஆகும். எனவே,

1 வானவியல் அலகு = 8.3 ஒளிநிமிடங்கள் எனவும் சொல்லலாம்.

1 ஒளியாண்டு = 9,460,523,256,033.83 / 149,597,871 = 63,239.69 வானவியல் அலகுகள்

படம் எடுக்கப்பட்ட தளம் : http://www. spaceanswers.com/wp-content/uploads/2012/10/iod-universe-110411.jpg
http://www. school-for-champions.com/astronomy/images/astronomical_distances-au.gif

பட்டாம்பூச்சி விளைவு


காற்றோடை குறித்துச் சொல்கையில் எனக்கு என் பட்டாம்பூச்சி நினைவுக்கு வந்தது... காரணம், பட்டாம்பூச்சி விளைவு (Butterfly Effect).

அது என்ன பட்டாம்பூச்சி விளைவு...?

எங்கோ நிகழும் ஒரு பட்டாம்பூச்சியின் சிறகசைப்பு உலகின் மற்றொரு கோடியில் ஒரு புயலை ஏற்படுத்தலாம். அதாவது, ஒரு நிகழ்வின் போக்கும் தாக்கமும், அதன் ஆரம்ப கணத்தின் நுண்ணிய நிகழ்வுகளைச் சார்ந்துள்ளது.

இப்படித்தானே எல்லோரும் சொல்கின்றார்கள்..? ஆனால், உண்மையில் அதுவல்ல பட்டாம்பூச்சி விளைவு. அமெரிக்க கணிதவியலாரும், வானவியலாருமான Edward Norton Lorenz என்பாரே முதன் முதலில் இப்பட்டாம்பூச்சி விளைவு குறித்துச் சொல்கிறார்.

ஒரு இயங்கியல் அமைப்பில் (Dynamical System), ஒழுங்கற்ற ஒரு அமைப்பிலோ, ஒரு தொடர் செயற்பாட்டிலோ ஒரு ஒழுங்கைத் தேடுவது கேயாஸ் தியரி (Chaos Theory) எனப்படும். ஒரு நிகழ்வு இப்படித்தான் இருக்கப் போகின்றது என்று அனுமானிக்க அதன் ஆரம்ப கணம் நமக்குத் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும். அந்த ஆரம்ப கணத்தில் ஏற்படும் சிறு சிறு மாற்றங்கள் காலப்போக்கில் நிகழ்வின் தோற்றம் மிகுந்த வேறுபாடுகளோடு இருக்கும். மிகச் சரியாக எதிர்பார்த்துவிட முடியாது. ஆனால், சுத்தமாக எதிர்பார்க்கவே முடியாது என்றும் சொல்லி விட முடியாது. (12B படம் மாதிரிதான்...) இதில்தான் இந்தப் பட்டாம்பூச்சியின் விளைவு குறித்தும் பேசப்படும்.

சரி, இனி நம்ம லோரன்ஸ் சொல்ல வந்தது என்னவென்றால், எங்கோ பிரேசிலில் நிகழும் பட்டாம்பூச்சியின் சிறகசைப்பினால் டெக்சாசில் புயலடிக்கும் என்று சொல்லிவிடமுடியுமா (Does the flap of a butterfly’s wings in Brazil set off a tornado in Texas?) என்றுதான் அவர் கேட்க வந்தார். புயலடிப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கக்கூடும். நிச்சயமாக நம்மால் எதையும் சொல்லி விடமுடியாது என்று சொன்னதை நம் மக்கள், அப்படித்தான் நிச்சயமாக நடக்கும் என்று புரிந்துகொண்டு விட்டார்கள்.

காற்றோடை (Jet Stream)


காற்றோடை (Jet Stream)

பூமி போன்ற கிரகங்களின் வளிமண்டலத்தில் காணப்படும் ஒரு விதமான காற்றோட்டம். காற்றோட்டம் என்று சொல்லி விட்டேன் ஆனால், சரியான சொல் அதுவல்ல.

ஆங்கிலத்தில் Wind Shear அல்லது Wind Gradient என்பர். காற்றுச் சறுக்கம் என்று சொல்லலாம் என்று கருதுகிறேன். இது ஒரு குறுகிய தூரம் மட்டுமே காணப்படும். இதனை vertical மற்றும் horizontal என்று இருவகையாகப் பிரிப்பார்கள்.

நம் காற்றோடை என்பது அப்படியான Vertical Shear. பக்கவாட்டு வெப்ப மாறுதல்களால் ஏற்படும் காற்றுச் சறுக்கல். பொதுவாக காற்று, மிகை அழுத்தப் பகுதியில் இருந்து குறை அழுத்தப்பகுதியை நோக்கிப் பாயும். அப்படிப் பாயும்பொழுது அங்கே, Coriolis (இதனைக் குறித்து சுருக்கமாகத் தேடிப்படித்துவிடுங்கள்) விசையொன்று செயல்படும். அது நம் காற்றுச் சறுக்கலை மேலும் கீழுமாக, அதாவது புவியின் வட மற்றும் தென் துருவமாக அலைக்கழித்து ஒரு sine அலையைப் போன்ற அமைப்பைத் தரும். இதனை Meandering அமைப்பு என்பார்கள்.

இது நம் வளிமண்டலத்தின் Troposphereக்கும் Stratosphereக்கும் இடையே இருக்கும் ஒரு திருப்பப்பகுதியான Tropopause பகுதியில் நிகழும். புவியின் முக்கியமான காற்றோடை எதுவென்றால் மேற்கத்திய காற்றுதான். அதாவது மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி வீசும் காற்று. இக்காற்றோடையானது, இரண்டு மூன்று அல்லது பல்வேறு கிளைகளாகப் பிரியலாம், பிரிந்து ஒன்றாகச் சேரலாம், அப்படியே கலைந்தும் போகலாம், பல்திசைகளிலும் வீசவும் செய்யலாம்.

கடல்மட்டத்திலிருந்து ஏறக்குறைய 7 முதல் 12 கிலோமீட்டர் உயரத்தில் வீசும் துருவக்காற்றோடை(polar jet)தான் மிக சக்தி வாய்ந்தது. அதற்குச் சற்று வலுக்குறைந்த Subtropical jet கடல் மட்டத்திலிருந்து 10 முதல் 16 கிலோமீட்டர் உயரத்தில் வீசும்.

இக்காற்றோடை உருவாவதற்கான காரணம், புவிச்சுழற்சியும், சூரியக்கதிர்வீச்சால் வளிமண்டலத்தில் ஏற்படும் வெப்பமாறுபாடும் ஆகும். வேறுசில கிரகங்களில் அக்கிரகத்தின் உள்வெப்பமும் ஒரு காரணமாக அமையக்கூடும். 

இதுல ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு என்னன்னா, இந்தப்பக்கம் விமானத்துல பறக்குற விமானிகள் இந்தக் காற்றோடைகளில் தங்கள் விமானத்தை திறம்பட நுழைத்து தங்களின் எரிபொருளையும் நேரத்தையும் மிச்சப்படுத்துவார்கள். டர்புலன்ஸ் சற்று அதிகமாகத்தான் இருக்கும். எல்லா விமானிகளும் அப்படிச் செய்வதில்லை.

1883ல் இந்தோனேஷியாவின் Krakatoa எரிமலை வெடித்ததற்குப்பின் பல வருடங்களாக காலமாறுபாட்டைக் கணிக்கும்பொழுது பல தகவல்களைச் சேகரித்துப் பதிந்துள்ளார்கள். அதில் ஒரு சம்பவத்தை அவர்கள் Equatorial Smoke Stream என்று ஒன்றைக் குறிப்பிட்டுள்ளார்கள்.

1920ல் ஜப்பானின் ஃப்யூஜி எரிமலைக்கு அருகே ஒரு காற்றோடையைக் கண்டுபிடித்தார். 1933ல் உலகைத் தனியாக வலம் வந்த அமெரிக்க விமானி Wiley Post, இந்தக் காற்றோடைகளை கண்டுபிடிக்க பேருதவியாக இருந்திருக்கின்றார். இவர் அதிஉயரப் பறக்கும் விமானத்தில் பல முறை முயற்சி செய்து, தன் விமானத்தின் தரைவேகம், வளிவேகத்தை விட அதிகரிப்பதைக் கண்டு கொண்டார். அதிலிருந்து காற்றோடை இருப்பதை உறுதி செய்துகொண்டார்.

1939 முதல் 1945 வரையிலான இரண்டாம் உலக யுத்தத்தின் போதுதான் இக்காற்றோடை குறித்து நன்கு அறிந்து கொள்ள முடிந்தது. காரணம், ஒரே பாதையிலான, அடிக்கடியிலான விமானப் பயணங்கள். இக்காற்றோடையைப் பயன்படுத்தி பறந்தார்கள்.

ஈர்ப்பு விசை


ஈர்ப்பு விசை (Gravitational Force or Gravity) என்றால் என்ன?

நீங்க ஒரு மூணாங்கிளாஸ் படிக்கிற பசங்களா இருந்தா ஆப்பிள் மரத்துல இருந்து கீழ விழுகுதா.... கல்லை மேலே தூக்கிப் போட்டா அது கீழ விழுகுதா... அதான் க்ராவிட்டின்னு சமாளிச்சுட்டு.... அந்தப்பக்கம் திரும்பி... அவ்....னு வடிவேலு மாதிரி அழுதுகிட்டு போயிரலாம்.... ஆனா, நீங்கள்லாம் கண்ணுக்குள்ள இல்லை மூளைக்குள்ளேயே விரலை விட்டு ஆட்டிருவீங்க.... அதுனால... இப்ப பாருங்க...

க்ராவிட்டின்னா என்ன...? உண்மையச் சொல்லனும்னா... இன்னும் நமக்குத் தெளிவா தெரியாது. ஆனா, அது எப்டீ செயல்படுதுன்னு சிலபல ஐடியாக்கள் இருக்கு நம்மகிட்ட. எல்லோரையும் கேட்டா, டக்குனு... நியூட்டன் கண்டுபிடிச்சாரே அதானே...? அப்டீன்னு கேப்பாங்க.. என்னோமோ காணாம போன நாய்க்குட்டியைக் கண்டு பிடிச்ச மாதிரி....

ஆப்பிள் அவரு தலையில விழுந்தவுடனேயே அவரு க்ராவிட்டிதான்னு உலகத்துக்கு அறிவிச்சுறலை. நிறைய கஷ்டப்பட்டுருப்பாரு, நிறைய ஹோம்ஒர்க் செஞ்சுருப்பாரு, நிறைய கணக்குகள் போட்டுப் பார்த்துருப்பாரு. அப்டீலாம் கஷ்டப்பட்டு ஒரு முடிவுக்கு வந்து, அதை எல்லாரும் ஏத்துக்குற மாதிரி கணிதச் சமன்பாடுகளா முன் வைச்சாரு. அறிவியல் உலகமும் அதை ஏத்துக்கிச்சு. அப்டீ என்ன சொன்னாரு...?

நிறையுள்ள இரண்டு பொருள்களுக்கு இடையே ஏற்படும் விசையே ஈர்ப்பு என்கிறார். அந்த விசையும், இரு பொருள்களுக்கு இடையே இருக்கும் தொலைவைப் பொறுத்து வலுவானதாகவோ அல்லது வலுக்குன்றியதாகவோ இருக்கும் என்கிறார்.

அறிவியல் கோட்பாடாகச் சொல்வதென்றால்,

ஈர்ப்பு விசையானது, திணிவுகளின் பெருக்கற்பலனுக்கு நேர்த்தகவிலும், அவற்றிற்கிடையேயுள்ள தொலைவின் இருமடிக்கு எதிர்த்தகவிலும் இருக்கும்.

F = G.((m1.m2)/r^2)

G என்பது ஈர்ப்பியல் மாறிலி. m1 மற்றும் m2 இரு பொருள்களின் நிறை, r என்பது அப்பொருள்களுக்கு இடையே உள்ள தொலைவு.

இதன் அடிப்படையிலதான் இந்த பிரபஞ்சத்துல எல்லாமே ஒன்றை ஒன்று சுத்தி வருதுன்னு சொல்றாங்க. புரியுற மாதிரி சொல்றதா இருந்தா... ஒரு கயித்துல கல்லைக்கட்டி சுத்தும்போது... நம்ம கைக்கும் அந்தக் கல்லுக்கும் இடையே இருக்குற கயிறுதான் ஈர்ப்புவிசை.

நாம பூமியில இருக்கோம். நமக்கும் நிறை இருக்கு, பூமிக்கும் நிறை இருக்கு. பூமியும் நம்மளை ஈர்க்கும், நாமளும் பூமியை ஈர்ப்போம். ஆனா, பூமி நம்மைவிட ரொம்பப் பெருசுங்குறதுனால அதோட ஈர்ப்புதான் அதிகமா இருக்கும், அதுனால நாமதான் அது மேல போய் விழுந்து கிடப்போம்.

விண்வெளியில் வேறு எந்த விசையும் செயல்படாத ஓரிடத்தில் இரண்டு புத்தகங்களை சற்று அருகருகே வைத்தால், அவற்றின் நிறை காரணமாக ஈர்ப்பு விசை ஏற்பட்டு ஒரு சமயத்தில் அவைகள் இரண்டும் ஒன்றாக சேர்ந்து விடும்.

இதன் அடிப்படையில்தான் யுரேனஸ் தன் சுற்றுப்பாதையில் சற்று ஆட்டம் காணுறதை வச்சு நெப்ட்யூன்னு ஒரு கிரகத்தைக் கண்டு பிடிச்சாங்க.

சரி, இதுவரைக்கும் நாம பாத்தது நியூட்டனோட ஈர்ப்பு விசை. அடுத்து நம்ம ஐன்ஸ்டைன் வர்றாரு... அவரு சொல்றாரு... ஈர்ப்பு விசைன்னு சொல்றது ஓகே... ஆனா, அந்த விசைதான் நேரடியா பூமியையும் மத்த கிரகங்களையும் இழுத்துப் பிடிச்சுக்கிட்டு சுத்த வைக்குதுன்னு சொல்றது அபத்தம்.

சூரியன் மாதிரி நிறையுள்ள ஒரு பொருள் தன்னைச் சுத்தி இருக்குற வெளியை வளைச்சுருது... அந்த வளைவுக்குள்ள மாட்டிக்கிட்ட கிரகங்கள் வேற வழியில்லாம அதுக்குள்ள வழுக்கி விழுந்துக்கிட்டு இருக்குதுங்கன்னு சொல்றாரு. ஆடிப்போயிட்டாங்க எல்லாரும்.

ஒரு உதாரணம் சொல்றேன் கேளுங்க. மழை பெய்ஞ்சு முடிச்சதும் மண்ரோட்டுல ஒரு மாட்டுவண்டி போகுதுன்னு வைங்க. என்னாகும்? ஒரு தடம் உருவாகும் அல்லவா? அது பிற்பாடு காய்ஞ்சு கெட்டிப்பட்டு இறுகுனதுக்கு அப்புறம் ஒருத்தரு அந்தப்பக்கமா சைக்கிள்ல வர்றாருன்னும் வச்சுப்போம். அந்த மண் பாதையில உருள்ற சக்கரம் ஒரு சமயத்துல அந்த மாட்டு வண்டி போன தடத்துக்குள்ள வந்து சிக்குனா... அதுவரைக்கும் அந்த சைக்கிள் வந்த வேகத்துக்கு... இனி அந்த மாட்டுவண்டி போன தடத்துலேயேதான் போகும். (சைக்கிள்காரரு தடுமாறுவாரு அது வேற கதை...)

அது மாதிரி, இந்த சூரியன் தன்னைச் சுத்தி இருக்குற வெளியை வளைச்சு வச்சுருக்கு அதுக்குள்ள சிக்குன நம்ம பூமிக்கு வேற வழியைத் தேர்ந்தெடுக்க வக்கில்லாம, அந்த வளைவுக்குள்ளேயே சுத்தி வருது. அறிவியல் உலகம் ஸ்தம்பித்துப் போனது. ஒருவரும் பேசவில்லை. ஆனால், இது எப்படிச் சாத்தியம்...? வெளியையாவது வளைப்பதாவது... ஐன்ஸ்டைனுக்கு நிச்சயம் கிறுக்குதான் பிடித்துப்போனது என்று மனதிற்குள் நினைத்திருப்பார்கள்.

ஆனால், வெளி வளைகின்றது, அதனூடே செல்லும் ஒளியும் நேர்பாதையில் செல்லாது வளைந்தே (Gravitational Lensing) செல்லும்னு ஆர்தர் எடிங்டன்ங்குறவரு 1919ல அதை நிரூபிக்கிறாரு. இந்த இணைப்பைப் பாருங்க.

http://ircamera.as.arizona.edu/NatSci102/NatSci102/text/lightbend.htm

ஐன்ஸ்டைன் ஈர்ப்பை வெறும் விசையாகப் பார்க்கவில்லை. அது வெளியை மட்டுமல்ல நான்காவது பரிமாணமான காலத்தையும் சுருக்குகின்றது என்கிறார். அட, என்னடா இது வம்பாப் போச்சு... வெளியை வளைக்குதுன்னாரு... நம்பமுடியலை... சரி அதுக்கப்புறம் கொஞ்சம் கஷ்டப்பட்டு புரிய வச்சாச்சு. வெளி வளையுது அதுனால ஒளி வளையுதுன்னு. இப்ப என்னடான்னா... காலத்தையும் வளைக்குதுங்குறாரே... கன்ஃபர்மா இவரு லூசுதான்னு சொல்லிருப்பாங்க.

நியூட்டனைத் பொறுத்தவரையில் காலம் தனித்த ஒன்று. ஐன்ஸ்டைனைப் பொறுத்தவரை காலம் சார்புடையது. எல்லாருக்கும் ஒரே மாதிரி இருக்காது. ஈர்ப்பு விசை கூடக் கூட காலம் சுருங்கி விடும். ஒரு கட்டத்தில் காலம் ஸ்தம்பித்துப்போய்விடும். காலமில்லாக் காலமாகிப்போய்விடும் என்கிறார்.

சரி ஈர்ப்பு விசை நிறையின் காரணமாக ஏற்படுகின்றது என்று தெரிகின்றது. அது வெளியையும் வளைக்கின்றது ஒளியையும் வளைக்கின்றது, ஏன், காலத்தையும்கூட வளைக்கின்றது என்று தெரிகின்றது. ஆனால், அந்த விசை கடத்தப்படுவதற்கு எது மூலமாக இருக்கின்றது...?

அடிப்படையான நான்கு விசைகளில் வேறு எந்த விசைகளும் இப்படி ஒரு பரந்தளவில் செயல்படுவதில்லை. அப்படி பரவலாக இந்த விசை செயல்படுவதற்கு ஏதேனும் ஊடகம் இருக்கக்கூடுமோ என்று தேடப்படுகின்றது. அதற்கு க்ராவிட்டான் என்று பெயரும் கூட வைத்து விட்டார்கள். பிள்ளை பெறுமுன் பெயர் வைப்பது போல.

இந்தக் க்ராவிட்டானை மட்டும் கண்டுபிடித்துவிட்டால் போதும், Unified Field Theory-UFT ஒரு முடிவுக்குக் கொண்டு வந்துவிடலாம் என்கிறார்கள். அதாவது, இன்றைக்கு இருக்கும் நான்கு அடிப்படையான விசைகள் எல்லாம் ஒரு காலத்தில் அதாவது பெருவெடிப்பிற்கு முந்தைய காலத்தில் ஒரே புள்ளிக்குள் எப்படி அடங்கிக்கிடந்தன என்று தெரிந்துகொண்டுவிடலாம்.

அடிப்படையான நான்கு விசைகளைக் குறித்து இங்கே பாருங்கள்...https://www.facebook.com/photo.php?fbid=595404967160845&set=a.551456458222363.1073741825.100000740415193&type=3&permPage=1

படம் எடுக்கப்பட்ட தளம் : https://einstein.stanford.edu/MISSION/mission1.html







E=MC^2


பொருண்மை - ஆற்றல் சமன்பாடு (Mass–Energy Equivalence)

இதனைப் பார்ப்பதற்கு முன்பு சுருக்கப் பார்வை ஒன்று.

ஐன்ஸ்டைனின் சிறப்புச் சார்பியல் கோட்பாடு (Special Relativity) மற்றும் பொதுச் சார்புக் கோட்பாடு (General Relativity) இரண்டையும் சேர்த்து நாம் சார்புக்கோட்பாடு அல்லது சார்பியல் கோட்பாடு (Theory of Relativity) என்று பொதுவாக அழைக்கிறோம்.

சார்பியல் கோட்பாடு கூறுவது என்னவென்றால்,
  • எல்லாம் பார்வையாளரைப் பொறுத்தது. வெளி (Space), காலம் (Time) இரண்டும் பார்வையாளரின் திசைவேகத்தைப் பொறுத்து மாறுபடும். அதாவது அவை இரண்டும் சார்புடையது. நிலையானது அல்ல. பார்வையாளர் இருக்கும் குறியீட்டுச் சட்டத்தைப் (Frame of Reference) பொறுத்து சுருங்கியோ அல்லது விரிந்தோ காணப்படலாம்.
  • வெளியும் காலமும் தனித்தனியானது அல்ல. இரண்டும் வெளிகாலம் (Space-Time) என்ற ஒன்றின் தனித்தனியான இரண்டு பார்வைகளே.
  • ஒளியின் வேகம் எந்த ஒரு பார்வையாளருக்கும் மாறாத ஒன்று.
  • எந்தவொரு குறியீட்டுச் சட்டத்திலும் இயற்பியல் விதிகள் மாறாதது.

1687ல் நியூட்டன் இயக்கவிதிகளை வகுத்திருந்தார். அது நம் அன்றாட வாழ்க்கை முறையில் தொடர்புடையவைகளுக்குப் பொருந்தி வந்தன. ஆனால், நம்மால் எட்ட முடியாத வேகத்தை நெருங்குகையில் இந்த விதிகள் பொய்த்துப் போவதை ஐன்ஸ்டைன் கண்டுகொண்டார். துகள்களின் (Particles) இயக்கம் குறித்து ஆய்வு செய்யும்பொழுது அதன் வேகம் அளப்பறியது. அவ்வமயம் நியூட்டனின் விதிகளைக் கொண்டு எதனையும் கணிக்க இயலவில்லை.

ஏனெனில், நியூட்டனைப் பொறுத்தவரையில் காலம் என்பது தனித்த ஒன்று, நிலையான ஒன்று. ஆனால், அளப்பறிய வேகத்தில், காலம் சுருங்குவதையும், பொருளின் எடை கூடுவதையும் ஐன்ஸ்டைன் உணர்ந்தார். விளைவு, 1905ம் வருடம் செப்டம்பர் மாதம் 27ம் தேதி சிறப்புச் சார்பியல் கோட்பாட்டினை (Special Theory of Relativity) முன் வைத்தார்.

இந்தச் சிறப்புச் சார்பியல் கோட்பாட்டினை முன் வைக்கும்பொழுதுதான் இந்த பொருண்மை-ஆற்றல் சமன்பாட்டினை (Mass-Energy Equivalence) வெளிப்படுத்தினார்.

E=MC2

பொருளொன்றின் நிறை (அ) திணிவு (அ) பொருண்மை அதன் ஆற்றலுடன் கொண்டுள்ள தொடர்பினை இச்சமன்பாடு விளக்குகின்றது.

E = Energy (ஆற்றல்)
M = Mass (நிறை-திணிவு-பொருண்மை)
C = Speed of the Light in Vacuum (வெற்றிடத்தில் ஒளியின் வேகம்)

ஆற்றலின் அலகு ஜூல்.
நிறையின் அலகு கிலோகிராம்.
வேகத்தின் அலகு மீட்டர்/வினாடி

1 ஜூல் = 1கிகி x மீ2/வி2
E(ஜூல்) = m(கிலோகிராம்) x (299,792,458 மீ/வி)2.

(வெற்றிடத்தில் ஒளியின் வேகம் வினாடிக்கு 299,792,458 மீட்டர்கள்)

ஆக, ஒரு பொருளின் ஆற்றல் என்பது அப்பொருளின் நிறையினை ஒளியின் வேகத்தின் இருமடியோடு பெருக்கி வருவது ஆகும்.

நிறை அதி வேகத்தை எட்ட எட்ட ஆற்றல் அதிகரிக்கும். நிறையும் ஆற்றலும் வேறு வேறு அல்ல. இரண்டும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்ததே. நிறைக்குள் ஆற்றல் நிறைந்தே இருக்கின்றது. அதன் வேகம் அதிகரிக்கும்பொழுது நிறையின் ஒரு பகுதி அளப்பறிய ஆற்றலாக வெளிப்படும். அணுசக்தி, அணுகுண்டு இவையெல்லாம் இதன் பின்தொடர்ச்சியாக ஆய்வு செய்யப்பட்டே செயல்படுத்தப்பட்டன.

மாற்றிச் சொல்வதாக இருந்தால் அதிக ஆற்றலைக் கொண்டு நிறையுடைய பொருள் ஒன்றையும் உருவாக்கலாம்.

1933ல் பாரீஸில், Irène மற்றும் Frédéric Joliot-Curie என்பார்கள் முகிலறை (Cloud Chamber) ஒன்றில் ஆற்றல் நிறையாக மாற்றப்படுவதைப் படம்பிடித்துள்ளார்கள். (http://www.aip.org/history/einstein/ae22.htm)

இங்கிலாந்தில் கேம்ப்ரிட்ஜில் John Cockcroft மற்றும் E.T.S. Walton என்பார்கள் நிறை ஆற்றலாக மாற்றப்படுவதைக் கண்டறிந்துள்ளார்கள். தங்களது அணுச்சிதைத்திக் கருவியில் அணு ஒன்றைச் சிதைக்கையில் சிதறிய சில்லுகளின் எடைகள் ஒற்றை அணுவாக இருக்கும்பொழுது இருந்த எடையை விட குறைவாக இருப்பதைக் கண்டனர். அப்படிக் குறைந்து காணாமல் போன எடை ஆற்றலாக வெளிப்பட்டதையும் கண்டுபிடித்தனர்.

ஐன்ஸ்டைனின் நூற்றாண்டான 2005ல் கதிரியக்க அணு ஒன்றிலிருந்து காமா கதிரியக்கம் (Gamma rays) வெளிப்படும் முன்னும் வெளிப்பட்ட பின்னும் ஏற்படும் மீச்சிறு வேறுபாட்டை ஒரு குழு ஆராய்ந்தது. வெளிப்பட்ட கதிரியக்க ஆற்றலையும் அளந்தது. ஆச்சர்யம். அவ்வணுவால் இழக்கப்பட்ட எடை மற்றும் C^2ன் பெருக்கற்பலன், வெளிப்பட்ட கதிரியக்க ஆற்றலுக்குச் சமமாக இருந்தது.

ஐன்ஸ்டைனின் பொருண்மை - ஆற்றல் சமன்பாட்டின் அதிதுல்லிய கணிப்பை இவ்வாய்வு வெளிப்படுத்துவதாக இருந்தது.

ஐன்ஸ்டைனின் விளக்கம் (அவர் குரலில்)

"It followed from the special theory of relativity that mass and energy are both but different manifestations of the same thing -- a somewhat unfamiliar conception for the average mind. Furthermore, the equation E is equal to m c-squared, in which energy is put equal to mass, multiplied by the square of the velocity of light, showed that very small amounts of mass may be converted into a very large amount of energy and vice versa. The mass and energy were in fact equivalent, according to the formula mentioned above. This was demonstrated by Cockcroft and Walton in 1932, experimentally.

பாறைக்குள் தேரை எப்படி, எப்போது போனது?


Kathiroli Masilamani : பாறைக்குள் தேரை எப்படி, எப்போது போனது?

பதில்: 
யார் பார்த்தது? ஒரு ரெண்டு கதைகளைப் பார்ப்போம்.

கதை 1

தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டும்போது நந்தி சிலையை செய்யுறதுக்காக ஒரு பெரிய பாறை தலைமைச் சிற்பியால எடுத்து வரப்பட்டுச்சாம். அப்ப அந்த சிற்பியோட மகன், "அப்பா இந்தப் பாறையிலயா சிலை செய்யப் போறீங்க...? இது தேரை இருக்குற பாறையாச்சே... இதுல சிற்பம் செதுக்குனா... அது விரிசல் விட்டுருமே..."ன்னானாம்.

அந்த சிற்பி, "அடேய்... இது நான் பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுத்த பாறை... நீ சின்னப் பயல், உனக்கென்ன தெரியும் பேசாமல் இரு..." என்றாராம். அந்தப் பயலும் விடுவதாயில்லை, "இல்லையப்பா... இதில் சிற்பம் செதுக்காதீர்கள்... அது உங்களுக்கு இழிவையே தேடித்தரும்" என்றானாம்.

சிற்பியும், "சரி, எதை வைத்துச் சொல்கிறாய்?" எனக் கேட்க, அவனும், "பாறை சூடாகாமல் குளிர்விக்க நீங்கள் அப்பாறையின் மேல் நீரை ஊற்றி வந்தீர்கள் அல்லவா? மற்ற எல்லா இடங்களிலும் ஈரம் சீக்கிரம் காய்ந்து விட்டது. ஆனால் ஒரே ஒரு இடத்தில் மட்டும் ஈரம் காய்வதற்கு நேரம் எடுக்கின்றது. அதை வைத்துதான் சொன்னேன்." என்றானாம்.

அவரும், "அப்படியா... எங்கே அந்த இடத்தைச் சுத்தியால் தட்டுங்கள்..." எனச் சொல்ல, ஒருவர் சிறு சுத்தியை எடுத்து அந்த இடத்தில் தட்ட, பாறைச்சில்லுத் தெரித்து அதிலிருந்து ஒரு தேரை துள்ளிக்குதித்து ஓடியதாம்.


கதை 2.
ஒரு சமயம் பரமார்த்த குரு நடக்கச் சிரமப்படுகிறார் என்று சீடர்களுக்கு ஒரே கவலை. அப்பொழுது அந்தப்பக்கமாக ஒருவன் ஒரு குதிரை மீது வர, அவனிடம் அந்தக் குதிரையை விலை பேசி வாங்கிவிடலாம் என்று விலை கேட்க, அவனோ நூறு பொன்கள் என்று சொல்ல, இவர்கள் தங்களிடமிருந்த காசுகளை எண்ணிப்பார்த்தால், 13 பொன்களுக்கு மேல் இல்லை.

எங்களிடம் 13 பொன்கள்தான் இருக்கின்றன... எனச் சொல்ல... அதுக்கு நீங்க குதிரை முட்டைதான் வாங்க முடியும்னு அவன் கேலி பேசிட்டுப் போயிட்டான். இவங்களுக்கும் அது நல்ல ஐடியாவா தெரிஞ்சது. புதுசா ஒரு குதிரைய வாங்கிப் பழக்குறதுக்குப் பதிலா... நாம ஏன் ஒரு குதிரை முட்டை வாங்கி, அதைக் குதிரைக்குஞ்சா பொறிக்க வச்சு, அதை வளர்த்து, குருவோட பழகவிடக்கூடாதுன்னு யோசிச்சாங்களாம்.

சரின்னு... குதிரை முட்டை வாங்கக் கிளம்பிட்டாங்களாம். எல்லோரையும் கேட்டுப் பாக்க, அத்தனை பேரும் சிரிக்கிறாங்களே தவிர... எதுவுமே சொல்லலையாம். அந்த ஊருல ஒரு ஏமாத்துக்காரன் இருந்தானாம். அவன் இவங்களைப் பாத்ததும்... வாங்க, நான் உங்களுக்கு குதிரை முட்டை தர்றேன்... ஆனா, ஒரு முட்டை பத்து பொன்கள்னு சொல்ல, இவங்களும் ஓகேன்னு சொல்லி பத்து பொன்னைக் கொடுத்தாங்க.

அவன் இவங்களை ஒரு பூசணித் தோட்டத்துக்கு கூட்டிட்டுப் போயி, நல்ல பெரிய பூசணிக்காய் ஒன்னைப் பறிச்சுக் கொடுத்து, இதான் குதிரை முட்டை... எடுத்துட்டுப் போங்கன்னு அனுப்பிட்டானாம். இவங்க வர்ற வழியில, யாரு அதைத் தூக்கிட்டு வர்றதுன்னு ஒரே சண்டை. நீ பிடி, நான் பிடின்னு அதைக் கீழ போட்டுட்டாங்களாம்.

கீழ விழுந்த பூசணிக்காய் டமால்னு உடைஞ்சு போச்சாம். அப்ப பக்கத்துப் புதர்ல இருந்த ஒரு முயல் இந்தச் சத்தத்தைக் கேட்டதும்... பயந்து போயி குதிச்சு ஓட ஆரம்பிச்சுச்சாம். அடேய்... குதிரை முட்டை உடைஞ்சு குதிரைக் குஞ்சு குதிச்சு ஓடுதுறா.... அதைப் பிடிங்கடான்னு தலைமைச் சீடன் கத்த...

எல்லாப் பயலுகளும், அந்த முயலைத் துரத்திகிட்டு ஓர ஆரம்பிச்சுப் பிடிக்க முடியாம களைச்சுப் போயி திரும்பி வந்துட்டாங்களாம்.

இப்ப ரெண்டு கதையையும் ரிலேட் பண்ணிப் பார்க்கலாமா? முதல் கதைக்கு ஆதாரம் ஏதும் இல்லை. அப்டீயே அந்தப் பாறைச் சில்லைத் தட்டும்போது சில்லு கீழ விழுந்ததுல பக்கத்துல இருந்து ஏதாச்சும் ஒரு தவளை பரமார்த்த குரு கதையில ஓடுன குதிரைக் குஞ்சு மாதிரி தாவி ஓடிருக்கலாம்... அதை வச்சு பாறைக்குள்ள தேரைன்னு கதை கட்டியிருக்கலாம்.

சிற்பம் செய்யுறதுக்கு நல்ல கெட்டியான இறுகுன பாறைதான் வேணும். பாறைகளுக்குள்ளே துளைகளோ, வெற்றிடமோ, அல்லது காற்றுப்பை போன்ற அமைப்போ இருந்தால் அது சிற்பம் செய்யுறதுக்கு ஏற்றது அல்ல. ஏன்னா, அது எப்ப வேணாலும் உடைஞ்சு சிதறிபோயிடும். அதுனால, பாறையைத் தேர்ந்தெடுக்குறதுக்கு முன்னாடி அதைத் தட்டிப் பார்ப்பாங்க... அதுல வர்ற சத்தத்தை வச்சே... அது நல்ல பாறையா, தேறாத பாறையான்னு முடிவு பண்ணிருவாங்க.

தேறாத பாறைங்குறதைத்தான் நம்மாளுங்க தேறை விழுந்த பாறைன்னு உடான்ஸ் அடிக்கிறாங்க போல.


இனி அறிவியல் விளக்கம் என்னன்னு பார்ப்போமா...?

கல்லுக்குள் தேரை என்பது பிரிட்டானிய மாத சஞ்சிகையான Fortean Timesன் படி, கிட்டத்தட்ட பதினைந்தாம் நூற்றாண்டில் இருந்து இன்று வரையில் உலகம் பூராவற்றிலும் இருந்து சுமார் 210 சம்பவங்கள் பதியப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது. ஆனால், எதுவும் அறிவியலாலர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பெரிய பெரிய புவியமைப்பு ஆய்வாளர்கள் உலகம் பூராவும் பாறைகளையும் படிமங்களையும் வெட்டி ஆராய்ந்து வருகின்றார்கள். அவர்கள் ஒருவருக்கேனும் இது போன்ற சம்பவம் நிகழவில்லை. ஆனால், படிப்பறிவற்ற சாதாரண கல்லுடைக்கும் தொழிலாளிகளுக்கே இது போன்ற சம்பவங்கள் தோன்றுகின்றன.

சரி, தவளைகள் மற்றும் தேரைகளால் அது போன்று உயிர் பிழைத்திருக்க முடியுமா? சில உயிரினங்கள் இருக்கின்றன. அவைகள் நீளுறக்கத்தில் (Dormancy) ஆழ்வன. இயற்கைச்சூழல் மாறுபாட்டால் அவைகள் தங்கள் உடல் இயக்கங்கள், வளர்ச்சி, செயல்பாடுகள் ஆகியவற்றைத் தற்காலிகமாகக் குறைத்துக்கொண்டு உறக்கநிலைக்குச் சென்றுவிடும். இந்த நீள் உறக்கம் நான்கு வகையாகப் பிரிக்கின்றனர்.

1. Hibernation
2. Diapause
3. Aestivation (எஸ்டிவேஷன்)
4. Brumation

1. Hibernation
குளிர்காலத்தில் ஏற்படும் உணவுத் தட்டுப்பாடுகளாலும், அதிகக் குளிரில் இருந்து தங்களைக் காத்துக்கொள்ளவும் முன்னேற்பாடாக குளிர்கால உறக்கத்திற்குச் சில பாலூட்டிகள் தங்களைத் தயார்படுத்திக்கொள்ளும். வெப்பகாலங்களில் அதிக உணவை உட்கொண்டு அவற்றை கொழுப்பாக உடலில் சேர்த்துக்கொண்டு, குளிர்காலத்தில் பாதுகாப்பான ஓரிடத்தில் போய், தங்களது இதயத்துடிப்பு, உடல்வெப்பநிலை, இயக்கச் செயல்பாடுகள் எல்லாவற்றையும் குறைத்துக்கொண்டு உறங்கத் துவங்கிவிடும். பார்ப்பதற்கு இறந்துவிட்டதைப் போன்று தோன்றினாலும், அவற்றில் வளர்சிதை மாற்றங்கள் மிக மெதுவாக நடந்துகொண்டுதான் இருக்கும்.

2. Diapause
பூச்சிவகைகளின் முன்கூட்டித் தீர்மானிக்கப்படும் வளர்சிதைகுறைவுநிலை இது. இலையுதிர் காலத்திற்கும் இளவேனிற்காலத்திற்கும் இடையே இது நிகழும். Roe Deer எனப்படும் பாலூட்டி மானினத்தின் கருப்பையில் கருமுட்டை சென்று சினைப்பிடிப்பது கூட தடுக்கப்பட்டு, உரிய காலம் பார்த்து அனுமதிக்கப்படும்.

3. Aestivation
இது சில முதுகெலும்பிலிகளின் (invertebrates) சூழலைப்பொறுத்து அமையும் ஒரு நிலை. குறிப்பாக வறண்ட வெப்பமான காலங்களில். தோட்டத்து நத்தை மற்றும் சில புழுக்கள், அபூர்வமாக வேறு சில உயிரினங்கள், நுரையீரல் மீன் (Lung Fish) போன்றவற்றிற்கும் இது நிகழும்.

4. Brumation
இது ஊர்வன விலங்கினங்களில் நிகழும். குளிர்கால உறக்கம் போன்றதே ஆயினும், இவைகள் இடையில் நீர் அருந்துவதற்காக உறக்கத்தில் இருந்து விழிக்கும்.

ஆனால், எத்தனை காலம் இப்படி உணவு நீர் இன்றி நீள் உறங்குநிலையில் இவைகள் இருக்கும் என்றால், 8 முதல் 12 மாதங்கள் வரைதான். அதற்கு மேலும் தொடர அவற்றின் இயல்புநிலை இடம் கொடுக்காது. இயற்கையும் அனுமதிக்காது. மீறப்பட்டால் அவைகள் இறந்துபடும்.

கோடைகாலங்களில், நீர்நிலைகள் வற்றிப்போகும்பொழுது சில மீன்கள், மற்றும் தவளைகள் இவ்வாறே கோடைகால உறக்கநிலைக்குச் சென்று உயிர் பிழைத்திருக்கும். அச்சமயங்களில் தன் உடலின் நீரிழப்பைத் தடுக்க தன்னுடலைச் சுற்றி ஒரு கூடுபோன்று உருவாக்கிக்கொள்ளும். மூச்சு மட்டும் விட்டுக்கொண்டிருக்கும். மீண்டும் அடுத்த பருவத்தில் மழை பெய்து நீர்நிலை நிரம்புகையில் இவைகள் உறக்கத்தில் இருந்து விழித்துக்கொண்டு விடும்.

மேலும், பாறைகள் எல்லாம் ஒரு வருடகாலத்தில் எல்லாம் உருவாகி விடாது. அதிஉயர் வெப்பநிலையும் பன்னெடுங்காலங்களும் பாறை உருவாகிட தேவைப்படும்.டு அதற்குள் ஒரு தவளையோ தேரையோ போய் இருந்து உறங்கும் என்பதெல்லாம் சாத்தியமில்லை. இல்லை அவற்றின் முட்டைகள்தான் அதற்குள் இருக்கும் பிற்பாடு அவை பொரிந்து அதற்குள் வளரும் என்பதும் சாத்தியமில்லை. குஞ்சு வளர்வதற்கு போதிய உணவும் காற்றும் வேண்டும்.

ஆக, எப்படிப் பார்த்தாலும், பாறைக்குள் தேரை அறிவியல்படி சாத்தியமே இல்லை. பரமார்த்த குரு கதைதான்

நாகமணி அல்லது நாகரெத்தினம் உண்மையா?


நாகமணி அல்லது நாகரெத்தினம் உண்மையா?

பல வருடங்களாக (தோராயமாக 20 முதல் 30 வருடங்கள்) தன் விஷத்தை வெளியேற்றாது, (எவரையும் எதையும் தீண்டாது) காத்து வரும் நாகப்பாம்பின் அந்த விஷம் காலப்போக்கில் கடினமாகி அது நாகரெத்தினமாக மாறிவிடும். அது தானாக ஒளிரக்கூடியது. அமாவாசை இரவில் அந்த ரெத்தினத்தை வெளியே கக்கி எடுத்து அதன் வெளிச்சத்தில் இரை தேடி வேட்டையாடும்.

அந்த நாகரெத்தினத்தை வைத்திருப்பவர் மிகுந்த பக்திமானாகவும், நல்ல எதிர்காலம் கொண்டவராகவும், மிகப்பெரிய தலைவராகவும் இருப்பார். அந்த ரெத்தினத்தையும் சும்மா எடுத்து வைத்துக்கொள்ள முடியாது.

அதற்கென்று சில வழிமுறைகள் இருப்பதாக கருடபுராணம் சொல்கிறது. மதச்சடங்குகளைக் கற்றுணர்ந்த புரோகிதர் ஒருவர் அந்த நாகமணி பெறப்பட்ட விதம் குறித்து அறிந்து கொண்டபின் அதனை உரியவர் வீட்டில் பிரதிஷ்டை செய்வார். அந்த நாளில் வானம் கரிய மழைமேகங்களால் சூழப்பட்டு, இடி இடித்து, மின்னல் மின்னி பிரளயம் போல் உலகம் தோற்றமளிக்கும். அந்தக்கல்லை வைத்திருப்பவருக்கு நாகதோஷம் இராது. நோய்நொடிகள் அண்டாது. பேய் பிசாசுகள் எட்டிப் பார்க்காது. எந்தவகையிலும் அவருக்கு தொந்தரவுகள் வராது.


அந்த ரெத்தினத்தின் வெளிச்சத்தில் வேட்டையாடுவதற்காகவா 20 முதல் 30 வருடங்கள் வரை அந்த நாகப்பாம்பு வேட்டையாடி உண்ணாமல் உணவகத்தில் உணவு வாங்கி உண்ணும்? பாம்பின் விஷம் இறுகி கெட்டிப்பட்டு அது பாம்பின் தலைக்குள் இருக்கும் என்கிற அறிவிலித்தனமான கருத்து பாம்பு குறித்தும் அதன் விஷப்பைகள் குறித்தும் அறியாத மூடர்களாலேயே பரப்பப்பட்டிருக்க வேண்டும்.

சரி, பின்னர் எதைத்தான் நாகரெத்தினம் என்று சொல்கிறார்கள்?

இப்படி நியாயமாகக் கேள்வி கேட்டால் பதில் கூற ஆர்வம் பிறக்கும். ஹேலைடு அயனியின் ஆதிக்கம் பெற்ற வண்ணக் கனிமக்கல்லே அது. அதனை ஆங்கிலத்தில் Fluorite அல்லது Fluorspar என்பார்கள். இது கனசதுரப்படிக அமைப்பைக் கொண்டது. இது ஒரு வெப்பஒளிப்பாயம் (Thermoluminiscence). கைகளில் வைத்திருந்தாலே, கைச் சூட்டில் அது ஒளிரத்துவங்கி சில பல மணி நேரங்கள் ஒளி வீசும்.

இந்தக் கற்கள் சைபீரியா, இலங்கை, பர்மா போன்ற இடங்களில் கிடைக்கப் பெறுகின்றது. சைபீரியாவில் கிடைக்கும் அந்தக் கல்லானது, கைச்சூட்டில் வெண்மை நிறத்திலும், கொதிநீரில் பச்சை நிறத்திலும், நிலக்கரிச் சூட்டில் சிவப்பு நிறத்திலும் ஒளிரும்.

அக்கற்களில் உள்ள இயிற்றியம் (Yttrium) என்ற தனிமம்தான் அதன் பசுமை நிறத்திற்குக் காரணம். மற்ற வண்ணங்களுக்கு அக்கற்களில் கரைந்துள்ள மாசுகள் காரணமாக அமையும்.

சரி, இனி இது எப்படி நாகப்பாம்போடு தொடர்பு படுத்தப்படுகின்றது என்று பார்ப்போம். பாம்பு வகைகளிலேயே பூச்சிகளையும் உண்ணும் ஒரே இனம் இந்த நாகப்பாம்புதான். எறும்புகள், வெட்டுக்கிளிகள் மற்றும் சிலவகைப் பூச்சிகளை இப்பாம்புகள் உண்ணும். இரவில் குறிப்பாக மின்மினிப் பூச்சிகளை விரும்பி உண்ணும். காரணம் மற்றெந்த பூச்சிகளைப் பிடிப்பதைக் காட்டிலும் இதனைப் பிடிப்பது அவைகளுக்கு எளிதாக இருக்கின்றது.

நமக்கெல்லாம் தெரியும், பறந்துதிரியும் மின்மினிகள் ஆண் பூச்சிகள். பெண் பூச்சிகள் சற்றுப் பெருத்தும், பறக்க இயலாதவையாகவும், எங்காவது புற்களின் மேல் பசுமைநிற ஒளியை உமிழ்ந்துகொண்டு ஆண் பூச்சிகளுக்கு அழைப்பு விடுத்து அமர்ந்திருக்கும். அதனைத் தேடி ஆண்பூச்சிகள் கலவிக்கு வரும்.

இந்த குளோரோஃபேன் கற்களும் அதனயொத்த பசுமைநிற ஒளியை உமிழ்வதால் அந்த ஆண் மின்மினிப் பூச்சிகள் கவரப்பட்டு இக்கற்களை நோக்கி வரச்செய்யும். இதனை என்றொ ஒரு நாள் அவதானித்த நாகப்பாம்பு, இக்கற்களின் அருகே இருந்தால் நமக்கு அந்தப் பூச்சிகளை வேட்டையாடுவது எளிது என்று கண்டுகொண்டிருக்கும். கவனிக்கவும், இதற்கும் ஞாபகசக்திக்கும் தொடர்பில்லை. இது உயிர்வாழத் தேவையான ஒரு உந்துதல் அமைப்பு.

பல பாம்புகள் ஒரே ஒரு கல் இருக்குமிடத்து இருக்க நேரிட்டால் அந்தக் கல்லை அடுத்த பாம்பு அபகரித்து விடாமல் இருக்க போட்டியிட்டு எந்தப் பாம்பு தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருகின்றதோ அந்தப் பாம்பிற்கே அன்றைக்கு அதிக உணவு கிடைக்கும்.

இதனைப் பார்த்த நம் மனிதர்ளில் எவரோ ஒருவர் கட்டிய கதைதான்... நாகப்பாம்பின் நாகரெத்தினம். இன்றைக்குச் சந்தையில் உண்மையான நாகரெத்தினங்கள் என்று நிறையக் கிடைக்கின்றன. இன்றையச் சூழலில் எந்தவொரு நாகப்பாம்பும் 20 முதல் 30 வருடங்கள் உயிர்வாழ இயலாது. அப்படியே உயிர் வாழ்ந்தாலும், அவைகள் உணவுக்காக தன் இரையின் மீது விஷத்தைப் பாய்ச்சியே ஆக வேண்டியிருக்கும். ஆதலாம், அந்த விஷத்தைச் சேர்த்து வைத்து அதனை நாகரெத்தினமாக மாற்ற வாய்ப்பு இருக்காது.

மேலும், இந்த நாகரெத்தினத்தின் ஒளியில் வேட்டையாடுவதற்காக தன் விஷத்தைச் சேமிக்குமானால், அதுவரைக்கும் அது எப்படி உயிரோடு இருக்கும்? நாகரெத்தினத்தின் வெளிச்சத்தில் வேட்டையாடிவிட்டு பின் அதனை விழுங்கிவிடும் என்றால், வாயிலிருந்து அது செரிமானப் பாதைக்குப் போகாமல் தலை உச்சிக்கு எப்படிப் போய் பாதுகாக்கப்படும்?

ஆச்சர்யப்படும்படி சொல்வதையெல்லாம் வாயைப் பிளந்து கேட்காமல், இப்படிக் கேள்விகள் கேட்டு உணரத் தலைப்பட்டால் நம் அடுத்த சந்ததியினராவது அறிவாளிகளாக அமைய வாய்ப்புள்ளது. கேள்வி கேளுங்கள்.

பாம்பு


பாம்பு

பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும், பலருக்குத் தொடையும் நடுங்கும். காரணம் அதைப்பற்றிய அறியாமை அல்லது தவறான தகவல்கள். உண்மையில் விஷத்தன்மையுள்ள பாம்புகள் கடலில்தான் அதிகம். தரையில் இருக்கும் பாம்புகளிலும் பெரும்பாலும் விஷத்தன்மையற்றவைதான். அப்படியே விஷத்தன்மை உள்ள பாம்புகள் என்றாலும் அவைகள் தற்காத்துக்கொள்வதை விட தங்கள் உணவுகளை கொல்வதற்காகவே விஷத்தைப் பயன்படுத்தும். விஷமற்ற பாம்புகள் தங்கள் இரைகளை சுற்றி வளைத்து இறுக்கிக் கொன்று (Constriction) பின்னர் உண்ணும். தானே இறந்து கிடக்கும் பிராணிகளை உண்ணாது. அனைத்துப் பிராணிகளும் ஊனுண்ணிகள்.

பாம்புகள் ஊர்வன வகையைச் சார்ந்தது. ஏறத்தாழ 2700க்கும் அதிகமான வகைகள் உண்டு. பாம்புகளுக்குக் கால்கள் இல்லை. வெளிக்காதுகளும் இல்லை. தங்கள் இரையை வாசனையை வைத்தே அறிகின்றன. வாசனையையும் தங்கள் பிளவுபட்ட நாக்கினால் உணர்கின்றன. பாம்புகளின் பார்வை ஒன்றும் அத்துனை துல்லியமில்லை என்றாலும், வெளிச்சத்திற்கும் இருளுக்கும் அவற்றால் வித்தியாசம் காண முடியும். அசைவுகளையும் உணரமுடியும். சில பாம்புகளால் மனிதர்களைப் போன்றே இரு கண்களாலும் ஒரே பொருளைக் காண முடியும்.

பாம்புகளுக்கு வெளிக்காதுகள் இல்லாத காரணத்தினால், அதிர்வுகளை தன் தாடைகள் மூலமாக அறிகின்றன. கீழ்த்தாடையின் இடது வலது பக்கங்கள் நீட்சியுள்ள ஜவ்வினால் இணைக்கப்பட்டிருப்பதால், பெரிய விலங்குகளைக் கூட அவற்றால் விழுங்க முடியும்.

பாம்புகளின் தோலானது செதில்கள் அமைப்பைக் கொண்டது. இது அவற்றின் உடல் வெப்பநிலையை தக்க வைத்துக்கொள்ளவும், உருவை மறைத்துக்கொள்ளவும் (Camouflage) தரையில் ஊர்ந்து செல்லவும் பயன்படுகின்றது.

பாம்பு தன் தோலுரிப்பது (Moulting) அதற்குப் பல நன்மைகளைத் தருகின்றது. நன்கு வளர்ந்த பாம்பு வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறையும், வளரும் இளம் பாம்பு வருடத்திற்கு நான்கு முறைகளும் தோலுரிக்கும். 

நன்மைகள் என்னவென்றால், முதலில் பழைய தோல் போய் பளபளப்பான ஆரோக்கியமான புதிய தோல் கிடைக்கின்றது. இரண்டாவது, தன் மேல் ஒட்டி வாழும் ஒட்டுண்ணிகளை நீக்கும் வாய்ப்பு அமைகின்றது. 

பாம்பு தோலுரிக்கும் முன் உணவு உண்பதில்லை. மறைவான பாதுகாப்பான இடம் தேடிச் சென்று விடும். அச்சமயத்தில் தோல் வறண்டும் மங்கியும் காணப்படும். கண்பார்வை மங்கியும் காணப்படும். பின்னர் தோலின் உட்புறம் நீர்க்கசிவை உண்டாக்கும். பின்னர் மூக்கின் நுனியை சொரசொரப்பான எதிலாவது தேய்த்துக் கிழித்து அத்தோலை கூரிய எதிலாவது மாட்டச் செய்து, நகர்ந்து நகர்ந்து நாம் காலுறையைக் கழற்றுவது போல் தோலை உரித்து விடும். 

இப்படி தன்னைப் புதுப்பித்துக் கொள்வதாலேயே அது மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் அஸ்லெப்பியசின் தடி என்ற அடையாளத்தில் பாம்பின் படம் இடம் பெற்றிருக்கும்.

பாம்புகளின் பற்கள் அடிக்கடி புதுப்பித்துக்கொள்ளப்படும் (Polyphyodont) வகையைச் சார்ந்தது. 

பொதுவாகப் பாம்புகள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும். விரியன் போன்ற சில பாம்புகள் குட்டி போடும். 

பாம்பு விஷம் நம் இரத்தத்தை உறைய வைக்கும் என்பதால் மூளைக்குச் செல்லும் இரத்தம் குறைவுபட்டு மரணம் நிகழ்கின்றது. அது தவிர சில வகைகள் நரம்பு மண்டலங்களையும் பாதிக்கும். பாம்பு விஷத்தால் இறப்பதை விட பயத்தால் இறப்பவர்களே அதிகம். பாம்பு கடித்தவுடன் பதட்டப்பட்டு இரத்த ஓட்டைத்தை அதிகரிக்கக்கூடாது.

சில உண்மைகள்

  • சாரைப்பாம்புக்கு விஷம் கிடையாது.
  • சாரைப்பாம்பும் நல்லபாம்பும் இணைசேராது.
  • பாம்பு பால் குடிக்காது.
  • பாம்பு தாக்கியவரை நினைவில் வைத்து பழிவாங்கும் என்பது தவறு.
  • பாம்பு மாணிக்கக் கல்லைக் கக்கி அதன் ஒளியில் இரை தேடும் என்பது அபத்தம்.

இதில் இன்னும் திருத்தம் மேற்கொள்ளப்படும்....

வெப்ப இரத்தப் பிராணிகள், குளிர் இரத்தப் பிராணிகள்



வெப்ப இரத்தப் பிராணிகள், குளிர் இரத்தப் பிராணிகள் என்றால் என்ன?

தன் உடலின் வெப்பநிலையை தானே சீராக கட்டுக்குள் வைத்துக்கொள்ளும் பிராணிகள் வெப்ப இரத்தப் பிராணிகள் எனப்படும். அதாவது, சுற்றுப்புறத்தின் வெப்பநிலை அதிகரிக்கும்பொழுது தன்னைக் குளிச்சியாக வைத்துக்கொள்ளவும், சுற்றுப்புறத்தின் வெப்பநிலை குளிர்நிலைக்கு வரும்பொழுது தன் உடலின் வெப்பநிலையை உயர்த்தி கதகதப்பாக வைத்துக்கொள்ளவும் இவைகளால் இயலும். பாலூட்டிகள், பறவைகள் இந்த வகையைச் சாரும். (சில விதிவிலக்குகளும் உண்டு) 

சுற்றுப்புறத்தின் வெப்பநிலையை உள்வாங்கித் அதற்கேற்ப தன் உடலின் வெப்பநிலையை மாற்றிக் கொள்ளும் பிராணிகள் குளிர் இரத்தப் பிராணிகள் எனப்படும். அதாவது, சுற்றுப்புறம் வெப்பமாக இருந்தால் இவைகளின் உடலும் வெப்பமாக இருக்கும். குளிராக இருந்தால் இவைகளும் குளிராக இருக்கும். ஊர்வன, மீன்கள், பூச்சிகள், இருவாழ்உயிரிள் மற்றும் எண்கால் பூச்சிகள் (Arachnida) இந்த வகையைச் சாரும். (சில விதிவிலக்குகளும் உண்டு)

வெப்ப இரத்தப் பிராணிகள் (Warm Blooded) மற்றும் குளிர் இரத்தப் பிராணிகள் (Cold Blodded) என்று சொல்வதை அப்படியே நேரடிப்பொருள் கொண்டால் அது சரியாக இருக்காது. ஏனெனில், குளிர் இரத்தப் பிராணிகளுக்கு இரத்தம் குளிராக இருப்பதில்லை. அவைகளுக்கான தொழில்நுட்பப் பெயர்கள் இவ்வாறு அமையும்.

வெப்ப இரத்தப் பிராணிகள் = Endothermic / Homeothermic
குளிர் இரத்தப் பிராணிகள் = Ectothermic / Poikilothermic


விதிவிலக்குகள்

பெரும்பாலான பாலூட்டிகள் பறவைகள் அனைத்தும் வெப்ப இரத்தப் பிராணிகள் என்றாலும், வவ்வால்கள், அகழெலிகள் (Moles) போன்றவைகளின் உடல்வெப்பநிலை சுற்றுப்புறத்திற்கேற்ப மாறும் தன்மை கொண்டவை குறிப்பாக அவைகள் செயலற்று இருக்கும்பொழுது.

அதே போன்று சில பூச்சிகள், தேனீக்கள், பருந்துஅந்துப்பூச்சிகள் (Hawk Moths) தங்கள் சிறகசைப்பின் மூலம் தசைநார்களை அசைத்து தங்கள் உடல் வெப்பநிலையை அதிகரித்துக்கொள்ளும்.

தேனீக்கள் நெருக்கமான குழுக்களாகச் சேர்ந்து சிறகசைக்கும். சில மீன்களுக்கு இயல்பாகவே வளர்சிதை செயல்பாடுகளால் தன் மூளை மற்றும் கண்கள் குளிரில் உறைந்து விடாமல் காத்துக்கொள்ளும் அமைப்பு உள்ளது. ஏனெனில் மூளை மற்றும் கண்களின் பயன்பாடுகள் அவைகளுக்கு அவசியமாகின்றது.


எப்படி நிர்வகிக்கின்றன?

வெப்ப இரத்தப் பிராணிகள் தங்கள் உடல் வெப்பநிலையை உருவாக்கிட, பல்வேறு வழிகளைக் கையாண்டாலும், பெரும்பாலான வெப்பம் உணவைச் சிதைத்தே பெறுகின்றன. அவைகள் உண்ணும் உணவில் 60 சதவீதத்திற்கும் மேல் வெப்பநிலையை உருவாக்கவும் நிர்வகிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. மீதமுள்ளவையே உடலின் பொருண்மைக்குப் பயன்படுகின்றன. அதனாலேயே இவைகள் அதிகளவு உணவு உண்ணுபவைகளாக இருக்கின்றன.

மேலும், இவைகள் ஒரு நிழலான இடம் அல்லது காற்று வீசும் இடத்திற்கு இடம் பெயர்ந்தோ, தன் மீது தண்ணீர் ஊற்றிக்கொண்டோ தன் வெப்பநிலையைச் சமன் செய்து கொண்டாலும், உட்செயல்பாடாக, வியர்வை மற்றும் சிறுநீர் மூலமாயும் தன் உடல் வெப்பநிலையை இழக்கச் செய்யும். பாலூட்டிகளுக்கு மட்டுமே வியர்க்கும். மனிதர்கள் குரங்குகளுக்கு உடல் முழுவதும் வியர்வைச் சுரப்பிகள் உண்டு. பூனை மற்றும் நாய்களுக்கு வியர்வைச் சுரப்பிகள் பாதத்தில் உண்டு. திமிங்கலங்கள் பாலூட்டிகள் என்றாலும் அவைகள் தண்ணீரிலேயே இருப்பதால் அவைகளுக்கு வியர்வைச் சுரப்பிகள் இல்லை.

பெருத்த உடலுடைய பாலூட்டிகள் தங்கள் உடல் அதிகச் சூடாகிவிட்டால் குளிவிக்கச் சற்றுச் சிரமப்படும். அதனாலேயே யானைகளுக்கு பரந்துவிரிந்த அதே சமயம் மெல்லிய காதுகள். அதன் மூலம் தங்கள் உடல் வெப்பநிலையை அவைகள் இழக்கும். போதாதற்கு... காதை விசிறி போல் வீசி வெப்பத்தை காற்றில் விரயமாக்கும்.

பாலுட்டிகளுக்குப் பெரும்பாலும் உடல் மயிர் நிறைந்திருக்கும். பறவைகளுக்கு சிறகுககள். எல்லாம் வெப்பத்தினை தக்க வைத்துக்கொள்ளவே. பெரும்பாலான பாலூட்டிகளுக்கு அடர்ந்த சிறு முடிகள் (fur) இருக்கும். அவைகள் எல்லாம் குளிர்காலத்தில் வெப்பநிலையை தக்க வைத்துக்கொள்ளவே. கோடைக்காலத்தில் முடிகளை உதிர்ந்தும், குளிர்காலத்தில் முடிகள் அடர்ந்து வளர்ந்தும் காணப்படும். தன் உடலை நடுக்குவதன் மூலம் தசைகளை உராயச் செய்தும் உடலில் வெப்பநிலையை உருவாக்கிக்கொள்ளும்.


குளிர் இரத்தப் பிராணிகள் சுற்றுப்புறத்தின் வெப்பநிலையை உள்வாங்கிக்கொண்டு தங்கள் உடலின் வெப்பநிலையை அமைத்துக்கொள்கின்றன. வெப்பமான சூழலில் இவைகள் இரத்தம், வெப்ப இரத்தப் பிராணிகளின் இரத்தத்தை விட அதிக சூடாக இருக்கும். இவைகள் வெப்பமான சூழலில் அதி சுறுசுறுப்பாக இருக்கும். குளிரான சூழலில் மிக மந்தமாக இருக்கும். உணவின் பெரும்பகுதி இவைகளுக்கு உடலில் சேர்ந்து விடும். இவைகள் வெப்ப இரத்தப் பிராணிகளோடு ஒப்பிடுகையில் குறைவான உணவையே உட்கொள்ளும்.

பாம்புகள் பெரும்பாலும் இரவில் வேட்டையாடுவதில்லை. காரணம் அவைகளுக்கு வேட்டையாட தன் தசைகள் ஒத்துழைக்க வெப்பம் வேண்டும். நிழலான இருப்பிடத்தை விட்டு வெளியில் வந்ததும் உடனேயேயும் அவைகளால் வேட்டையாட முடியாது. சற்று வெயில் காய்ந்து அதன் பின்னர்தான் தேடிப்போய் வேட்டையாடும். காரணம், அவைகளின் தசை இயக்கம் வெப்பத்தில் இளகியும், குளிரில் கடினமாயும் மாறும் ஒரு வேதியல் வினையைப் பொறுத்தது.

குளிர் இரத்தப்பிராணிகள் சூரிய வெப்பத்தில் குளிர்காய்வதைப் பார்த்திருப்பீர்கள். சூரிய ஒளிக்கு செங்குத்தாகப் படுத்துக்கொண்டு, தன் விலா எலும்புகளை விரித்தும், கால்களை விரித்தும் தன் உடலின் பரப்பளவை அதிகரித்துக்கொண்டு சூரிய வெப்பம் தன் மீது அதிகளவில் படுமாறு குளிர் காயும். உடலின் வண்ணத்தையும் அடர்த்தியாக மாற்றிக்கொள்ளும். அப்பொழுதுதான் வெப்பத்தை வெளிவிடாமல் செய்ய முடியும்.

உடல் வெப்பம் அதிகமாகிப் போய்விட்டால், சூரிய ஒளிக்கு இணையாகப் படுத்துக்கொண்டோ அல்லது நிழலான இடம் தேடிப் போயோ, வாயை அகலத் திறந்து கொண்டும், உடலின் வண்ணத்தை மெலிதாக மாற்றிக்கொண்டும் அல்லது, குளிரான மணலுக்குள் குழிதோண்டிப் புதைந்து கொண்டும் தன் உடல் வெப்பத்தைக் குறைத்துக் கொள்ளும். மீன்கள் குளிர்காலத்தில், நீரின் ஆழத்திற்கும், அல்லது கதகதப்பான நீரிருக்கும் இடத்திற்கும் இடம் பெயர்ந்து விடும். சில மீன்களுக்கு குளிரில் உறைந்து போய்விடாதவாறு உடலில் சிறப்புப் புரதம் (Anti-freeze Protein) இருக்கும். 

பாம்புகள், பல்லிகள், தேரைகள், தவளைகள், சாலமண்டர்கள் (Salamanders) மற்றும் பெரும்பாலான ஆமைகள் குளிர்காலத்தில் குளிர்காலஉறக்கத்திற்குச் சென்று விடும். குளிர் தாங்காது, பல பூச்சியினங்கள் இறந்து விடும் அல்லது கதகதப்பான இடம் தேடிச் சென்றுவிடும் அல்லது மண்தோண்டி அடியில் சென்று விடும்.


சாதகங்களும் பாதகங்களும்

  • வெப்ப இரத்தப் பிராணியாக இருப்பதில் பல வசதிகள் உள்ளன. 
  • இவைகளால் குளிரான சூழலிலும் சுறுசுறுப்பாக இயங்க முடியும். 
  • புவியின் பெரும்பாலான இடங்களில் இவைகளால் உயிர்வாழ முடியும். ஆர்க்டிக், மலை உச்சி என்பதாயிருந்தாலும் சரி.
  • இவைகளால், புவியின் பல்வேறு சூழல்களிலும், சுறுசுறுப்பாக இயங்கவும், உணவு தேடவும், தற்காத்துக்கொள்ள சண்டையிடவும், இணையோடு இணைந்து இனப்பெருக்கம் செய்யவும் முடியும்.

  • குளிர் இரத்தப் பிராணிகளால் குளிரான சூழலில் கடினப்பட்டே அசைய முடியும். 
  • புவியின் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே உயிர்வாழ முடியும்.
  • இவைகளால் கதகதப்பான சூழல் இருந்தால் மட்டுமே சுறுசுறுப்பாக இயங்கவும், உணவு தேடவும், தற்காத்துக்கொள்ள சண்டையிடவும், இணையோடு இணைந்து இனப்பெருக்கம் செய்யவும் முடியும்.


குளிர் இரத்தப் பிராணியாக இருப்பதிலும் சில வசதிகள் உண்டு. வெப்ப இரத்தப் பிராணியை விட உயிர்வாழ குறைந்த அளவு சக்தியே போதுமானது. ஒரே உடலளவு உள்ள குளிர் இரத்தப் பிராணியை விட வெப்ப இரத்தப் பிராணி அதிக அளவு உட்கொள்ள வேண்டிவரும். ஏனெனில், உடல் வெப்பத்தினை உருவாக்க அதிகளவு உணவு தேவைப்படும்.

வெப்ப இரத்தப் பிராணியாக இருப்பதில் ஒரு குறைபாடு என்னவென்றால், கதகதப்பாய் உடலை வைத்திருப்பதால், பெரும்பாலான நச்சுக்கிருமிகளுக்கும், நுண்ணுயிரிகளுக்கும், ஒட்டுயிரிகளுக்கும் வாழ்வதற்கு வசதியாகப் போய் விடுகின்றது. ஊர்வனவற்றை விட, பாலூட்டிகளும், பறவைகளும் இதனால் அதிகளவில் பாதிப்படைகின்றன. ஆனாலும், அதிலும் அவைகளுக்கு அதிகளவில் நோய் எதிர்ப்புச் சக்தி இருந்து காப்பாற்றிவிடுகின்றது. ஊர்வனவற்றிற்கான நோயெதிர்ப்பு சக்தி வெப்பமான சூழலில் நன்கு செயல்படும். எனினும், நோய்த்தாக்குதல் சமயங்களில் அவைகள் தங்கள் உடல் வெப்பநிலையை குறைத்துக்கொண்டு அக்கிருமிகள் மேலும் வளரவிடாது தடுத்துக்கொள்கின்றன.

pH என்றால் என்ன?


pH என்றால் என்ன?

வேதியியலில், ஒரு கரைபொருளைக் (Solute) கரைக்கும் கரைப்பானாக (Solvent) நீர் இருக்கும் திரவத்தினை (Aqueous Solution) மதிப்பிடும் ஒரு மதிப்பாகும். 

இது 0வில் இருந்து 14 வரையில் மதிப்புகளைக் கொண்டிருக்கும். இரு வேறு எல்லைகளில் இருக்கும் பண்பினைக் குறிக்கும் மதிப்புகள் இவை. அதாவது அமிலத்தன்மையையும் (Acidic) காரத்தன்மையையும் (basic or alkaline) குறிக்கின்றன. அமிலத்தன்மையும் காரத்தன்மையும் இல்லாது இருப்பது நடுநிலை (Neutral) எனப்படும்.

pH அளவையில் 7 என்பது நடுநிலை. 7க்கு கீழே இருப்பவை அமிலத்தன்மையும், 7க்கு மேலே இருப்பவை காரத்தன்மையும் கொண்டிருக்கும். 7க்கு கீழே குறையும் ஒவ்வொரு மதிப்பும் அதன் முந்தைய மதிப்பை விட 10 மடங்கு அதிகமான அமிலத்தன்மையைக் கொண்டிருக்கும். அதே போன்று 7க்கு மேலே கூடும் ஒவ்வொரு மதிப்பும் அதன் முந்தைய மதிப்பை விட 10 மடங்கு அதிகமான காரத்தன்மையைக் கொண்டிருக்கும்.

சுத்தமான நீர் நடுநிலை. அதன் pH மதிப்பு 7 ஆகும். அதனுடன் வேதியியல் பொருட்கள் கலக்கப்படும்பொழுது, அப்பொருளைப் பொருத்து அது அமிலத்தன்மையுடையதாகவோ காரத்தன்மையுடையதாகவோ மாறும்.

உதாரணம் கூறி விளங்க வைப்பதானால், வெப்பமும் குளிரும் (Hot and Cold) இரு வேறு எல்லைகள். அவைகளை அளக்கும் அளவை வெப்பநிலை (Temperature) என்கிறோம். சுடுநீரையும் குளிர் நீரையும் ஒன்றாகக் கலந்தால் அவைகள் ஒன்றின் தன்மையை ஒன்று போக்கிக்கொண்டு சமநிலைக்கு வரும். அதே போன்று அமிலமும், காரமும் இருவேறு எல்லைகள். அவற்றை அளக்கும் அளவை pH மதிப்பு என்கிறோம். அமிலத்தையும், காரத்தையும் ஒன்றாகக் கலந்தால், அவைகள் ஒன்றை ஒன்று போக்கிக்கொண்டு தண்ணீராக மாறிவிடும்.

அதி அமிலத்தன்மையும், அதி காரத்தன்மையும் வினைபுரிபவைகள் (Reactives).

pH கண்டுபிடித்தவர் யார்? pHன் விரிவாக்கம் என்ன?

டென்மார்க் நாட்டு விஞ்ஞானியான, Søren Peder Lauritz Sørensen (SPL Sørensen) என்பார் Carlsberg Laboratoryல் 1909ம் ஆண்டு இதனை அறிமுகப்படுத்தினார். அப்பொழுது அவர் p↓H என்றுதான் குறிப்பிட்டிருந்தார். அதாவது p என்ற சிறிய எழுத்திற்கு அடுத்து Subscriptஆக H என்ற பெரிய எழுத்து வரும். அதாவது Power of Hydrogen என்பதைக் குறிக்குமாம். ஆனால், ஜெர்மன், பிரெஞ்சு, இலத்தீன் மொழிகளிலும் இதனைக் குறிப்பிடுகின்றனர். எதுவாக இருந்தாலும் ஒரே பொருளைத்தான் தருகின்றன.

pH எப்படி மதிப்பிடப்படுகின்றது?

ஒரு கரைசலில் இருக்கும் ஹைட்ரஜன் அயனிகளின் மோல் மதிப்புச் செறிவினைக் (Molar Concentration) கொண்டு pH மதிப்பு மதிப்பிடப்படுகின்றது. கணிதரீதியாக, இதனை ஹைட்ரஜன் அயனிகளின் மோல் மதிப்புச் செறிவின் பத்தினடிமான மடக்கையின் எதிர் மதிப்பாகச் சொல்வார்கள்.

pH = -log↓10 [H↑+]

ஹைட்ரஜன் அயனிகளுக்குப் பதிலாக ஹைட்ராக்ஸானியம் (H↓3O) அயனிகளைக் கொண்டும் குறிப்பிடுவார்கள்.

ஹைட்ரஜன் அயனிகள் கூடக் கூட அமிலத்தன்மை அதிகரிக்கும்; குறையக் குறைய காரத்தன்மை அதிகரிக்கும். அல்லது,

ஹைட்ராக்ஸானிய அயனிகள் குறையக் குறைய அமிலத்தன்மை அதிகரிக்கும்; கூடக் கூட காரத்தன்மை அதிகரிக்கும்.

அதனால்தான், நம் உடலில் அமிலம் பட்டுவிட்டால் தண்ணீரை ஊற்றுகிறோம். அது அமிலத்துடன் சேர்ந்து ஹைட்ரஜன் அயனிகளைக் குறைத்து விடும். அதைவிட காரத்தன்மை உடையவைகளைச் சேர்த்தால் இன்னும் விரைவாக அமிலத்தன்மை மட்டுப்பட்டு விடும். (இங்கே காரம் என்று குறிப்பிடுவது மிளகாய் காரம் அல்ல. அயனி உப்பு என்று பொருள் கொள்க.)

உதாரணம்
அமிலம் = வினிகர், எலுமிச்சை சாறு, மின்கல அமிலம், வயிற்றில் சுரக்கும் செரிமான அமிலம், ஆரஞ்சு சாறு, கடுங்காப்பி, சிறுநீர், எச்சில்

காரம் = சலவைத் தூள், அம்மோனியா, கடல் நீர், சமையல் சோடா, சவர்க்காரம், ப்ளீச்சிங் தூள்

உதவித்தளங்கள் : http://en.wikipedia.org/wiki/PH

கண்ணை நம்பாதே


கேள்வி: பேருந்துப் பயணங்களின்போது.... தொலைவில் இருக்கும் மரங்கள், மலைகள் நம் கூடவே வருவது போல் தோன்றுகின்றதே அது ஏன்?

பதில்: 

இதனை Optic Flow என்பார்கள்.


இதை தரவிறக்கி ஏதாவது ஒரு browserல் பாருங்கள்.

நமது பார்வை வீச்சானது ஆங்கில எழுத்து V போன்று இருக்கும். குறுகலான பகுதிக்குள் கடந்து செல்லும் மரங்கள் குறுகிய காலத்திற்குள் நம் பார்வை வீச்சில் இருந்து மறைந்து சென்றுவிடும். பரந்த பகுதிக்குள் இருக்கும் மரங்கள் கடந்து செல்ல சற்று அதிக நேரமாகும். ஆனால் அவையும் பின்னோக்கிதான் சென்று கொண்டிருக்கும்.

நீங்கள் ஒரு தொடர்வண்டியில் அமர்ந்திருக்கின்றீர்கள். அப்பொழுது உங்கள் அருகே உள்ள தொடர் வண்டி மிக மெதுவாக முன்னோக்கிச் செல்லத் துவங்குகின்றது. சாளரத்தின் வழியாக வேறு எந்த காட்சிகளும் உங்கள் கண்ணில் படாமல் அந்தத் தொடர்வண்டியினை மட்டும் பார்க்கும்பொழுது நீங்கள் அமர்ந்திருக்கும் தொடர்வண்டி பின்னோக்கிச் செல்வது போன்று உங்களுக்குத் தோன்றும்.

அதேதான் இங்கே அருகே உள்ள மரங்கள் சட்டென பின்னோக்கிக் கடந்து செல்லும்பொழுது தொலைவில் உள்ள மரங்கள் சிறிது முன்னோக்கிச் செல்வதுபோல் தோன்றுகின்றது. உண்மையில் அருகே உள்ள மரங்கள் வேகமாக உங்களைக் கடக்கின்றது, தொலைவில் உள்ள மரங்கள் சற்று நேரம் கழித்துக் கடக்கின்றது என்பதுதான் உண்மை.

நாம் நடக்கும்போது நிலவு நம் கூடவே வருவது போல் தோன்றுவதும், இரு வேறு அடுக்குகளில் இருக்கும் மேகங்களில் ஒரு மேகம் பின்னோக்கிச் செல்வது போல் தோன்றுவதும் இதனைப் போன்றதுதான்.


கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது

இதையும் பாருங்கள்...

முந்திரிப்பழம் பழமேயல்ல.



முந்திரிப்பழம் பழமேயல்ல.

ஆம், சற்றே பெருத்த காம்புதான் (Receptacle) அது. எனவேதான் அது பொய்க்கனி (False Fruit) என்று அழைக்கப்படுகிறது.

எனது சிறுவயதில் கேட்ட ஒரு வேடிக்கைக் கதை நினைவிற்கு வருகின்றது. Cashew Nut என்று பெயர் வரக்காரணம், ஆங்கிலேயர் நம் நாட்டிலிருக்கும்போது, ஒரு மூதாட்டி இம்முந்திரிப்பழங்களை கூவி விற்றுக்கொண்டிருந்தாராம். ஒரு ஆங்கிலேயர் அவரிடம் இது என்ன என்று ஆங்கிலத்தில் வினவியிருக்கிறார். ஆங்கிலம் தெரியாத அம்மூதாட்டியோ, விலை என்ன என்று கேட்கிறார் போலும் என்று நினைத்து, காசுக்கு எட்டு என்று கூறியுள்ளார். அந்த ஆங்கிலேயரும் அப்பதிலை அப்படியே ஆங்கிலத்தில் அவருக்கு ஏற்ற உச்சரிப்பில் ஒலிமாற்றம் (Transliterate) செய்ய Cashew Nut ஆனதாகக் கூறுவர்.

அன்னாசிப்பழம் ஒரு கூட்டுக்கனி


அன்னாசிப்பழம் ஒரு கூட்டுக்கனி (Multiple Fruit) (தொகுப்புக்கனி / கொத்துக்கனி (Collective Fruit)) என்பது உங்களுக்குத் தெரியுமா?

செந்தாழை எனப்படும் அன்னாசி பிரேசிலைத் (Mesoamerica பகுதிகள்) தாயகமாகக் கொண்டது. அதற்கும் முன்னரே தென்னமெரிக்க டுபியன் (Tupian) மொழிகளில் nanas (அருமையான பழம்) என்று சொல்லப்படுவதில் இருந்து Ananas comosus என்ற நுட்பப் பெயர் பெறப்பட்டு பின்னர், Ananas வகைகளை Pine என்று அழைப்பதால் இதற்கும் Pine என்ற பெயர் சேர்ந்துகொண்டது. தமிழிலும் அன்னாசி என்றே அழைக்கின்றோம்.

அன்னாசியின் மலர்கள் கொத்து மலர்களாகும் (Inflorescence). அதன் ஒவ்வொரு மலரும் சூல்பிடித்துக் கனியாகும்பொழுது ஒரே கனி போன்று அடுக்கடுக்காக அமைந்து விடுகின்றது. ஆக, அது ஒரே ஒரு கனியல்ல, பல கனிகளின் தொகுப்பு. இது போன்று சீத்தாப்பழம் (Annona squamosa), மல்பெர்ரி (Morus) போன்றவையும் கொத்துக்கனிகளாகும்.

விதைகளற்ற பழமாக இருப்பதால் இதனைக் கன்னிப்பழங்களில் (Parthenocarpy Fruits) வகைப்படுத்துவார்கள். இப்படி விதையின்றி பழமாவதை கன்னிக்கனியமாதல் என்பர். வாழைப்பழம், வெள்ளரி, தர்பூசணி, பேரிக்காய் போன்றவை இவ்வகைப் பழங்களாகும்.

ஃபிபனாச்சி எண்தொடரின் (Fibonacci Series) அமைப்பில் இக்கனிகள் அமைந்திருப்பது நம்மை இயற்கையின் சிறப்பாக அதனை வியக்க வைக்கின்றது.