Monday, January 19, 2015

இறப்பு (அ) மரணம் என்றால் என்ன?


இறப்பு (அ) மரணம் என்றால் என்ன?

பொதுவாக இதயத்துடிப்பு நின்றுவிட்டால் ஒருவர் இறந்துவிட்டதாகக் கருதுகிறோம். அல்லது இரண்டு விதமான மரணம் குறித்து நாம் அறிவோம்.

1. இதயமும் நுரையீரலும் தத்தம் செயல்பாடுகளை நிறுத்திவிடுவது
2. மூளை தன் செயல்பாடுகளை முற்றிலும் நிறுத்திவிடுவது.

ஆனால் மருத்துவம் மரணத்தினை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்துகின்றது.

1. Necrobiosis
2. Necrosis
3. Clinical Death
4. Brain Death
5. Somatic Death

1. Necrobiosis : உண்மையில் நேற்றிருந்த நாம் வேறு, இன்றிருக்கும் நாம் வேறு. ஒவ்வொரு நாளும் நாம் இறந்துகொண்டேயிருக்கின்றோம். ஆனால், பிறந்துகொண்டேயிருக்கின்றோம். எப்படி? தினமும், நமது உடலில் உள்ள செல்கள் (Cell) இறந்து புதிது புதிதான செல்கள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. இந்த Necrobiosis என்பது உயிரினத்தின் வாழ்க்கைச் சுழற்சியில் செல்களின் இறப்பைக் குறிக்கின்றது.

2. Necrosis : சட்டென்று ஒரே நேரத்தில் பல செல்கள் இறந்து விடுவது Necrosis எனப்படும். அதாவது நமது உடலின் ஒரு பகுதியோ அல்லது ஒரு உறுப்போ முற்றிலும் செயலிழந்துவிடுவது. இதனை infarction என்றும் மருத்துவத்தில் கூறுவார்கள். நமக்குத் தெரியும் நமது உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் உயிர்வளி அவசியமென்று. இது ஏதேனும் ஒரு காரணத்தினால் ஒரு பகுதியில் (குருதியோட்டமின்றி) தடைபடுமாயின் அடுத்தபகுதியில் உயிர்வளி கிடைக்காமல் அங்குள்ள திசுக்கள் இறந்துவிடும். மேலும், மருத்துவம் பயின்றோரிடம் மேல்விளக்கம் கேட்டுத் தெளிந்துகொள்வோம்.

3. Clinical Death : சுவாசமில்லை, குருதியோட்டமில்லை, மூளைச்செயல்பாடுகள் இல்லை என்றால் அதனை Clinical Death என்று கூறலாம். ஆனால் இதுவே முழு மரணம் எனக் கூற இயலாது. மரணத்தின் தொடக்க நிலை என்று வேண்டுமானால் கூறலாம். ஏனெனில் இந்நிலைக்குப் பிறகு, நின்றுபோன மேற்சொன்ன நிலைகளனைத்தும் திரும்ப இயங்கக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. நிகழ்ந்த சம்பவங்களும் சான்றுகளோடு உண்டு. உதாரணத்திற்கு Cardiac Arrest (நாம் Heart attack என்று தமிழில் சொல்வோமில்லையா:)) நிலையில் இதயம் தன் செயல்பாடை நிறுத்திக்கொள்ளும். இது ஒரு நான்கு நிமிடங்கள் நீடிக்கலாம். அதற்குள் அதனை Cardiopulmonary Resuscitation (CPR) என்ற முறையில் செயற்கைச் சுவாசமூட்டியும், செயற்கைமுறையில் இதயத்தைச் செயல்படத் தூண்டியும் செயல்படவைக்க வாய்ப்பிருக்கின்றது.

ஆனால், Clinical Death நிகழ்ந்து சிறிது நிமிடங்கள் கழித்து இறப்பு நிலைப்பட்டுவிடும். ஏனெனில், இறப்பு இந்நிலையிலிருந்து அடுத்த நிலையான Brain Deathற்குச் செல்கின்றது.

4. Brain Death : நமது மூளையானது உயிர்வளியோட்டமின்றி 3லிருந்து 7 நிமிடங்கள் வரை ஓரளவிற்குத் தாக்குப்பிடிக்கும். இன்றிருக்கும் மருத்துவ வளர்ச்சி நிலையில் இதற்குப்பின் ஒருவரை மரணத்திலிருந்து மீட்டு வர இயலாது என்றே தோன்றுகின்றது. ஏனெனில், மூளைச்சாவு ஏற்பட்டவுடன் மற்ற உறுப்புக்களுக்குத் தெரியாது தாம் எப்படி இயங்கவேண்டுமென்று.

5. Somatic Death : இந்நிலையையே நிச்சயமான இறப்புநிலை எனக் கூறலாம். அதாவது Clinical Death மற்றும் Brain Death இரண்டின் கூட்டு. இரண்டும் ஒன்றன்பின் ஒன்றாக நிகழ்ந்துவிட்டால் இறப்பு என உறுதிப்படுத்தலாம். இன்றிருக்கும் விஞ்ஞான வளர்ச்சியில், மூளைச்சாவு ஏற்பட்டும் செயற்கை முறையில் சுவாசமும், குருதியோட்டமும் அளித்து உடலுறுப்புக்களைச் செயல்பாட்டில் வைக்க முடிகின்றது. எப்பொழுது இச்செயற்கை முறை நிறுத்தப்படுகின்றதோ அப்பொழுது Somatic Death நிகழ்ந்துவிடும். இந்நிலையே உறுதியான இறப்புநிலை.

மூளைச்சாவு குறித்து எழுதும்பொழுது கோமா பற்றிய சிந்தனையும் வந்தது.

கோமா (COMA) என்பதற்கு ஆங்கிலத்தில் deep state of unconsciousness என விளக்கம் தருகிறார்கள். Conscious என்றால் தன்னைக்குறித்தும் தன் சுற்றுப்புறத்தைக்குறித்தும் உணர்வு கொண்ட ஒரு நிலை. ஆனால், இந்நிலையில் அப்படி ஒரு சுயஉணர்வு இருப்பதில்லை. எனவே, கோமா என்பதை ஆழ்நிலை மயக்கம் எனலாமா அல்லது பாரிய நினைவிழப்பு எனலாமா, மீளாஉணர்வுநிலை எனலாமா என்பதை நண்பர்கள் பரிந்துரைக்கட்டும்.

இந்நிலையில் மூளையானது மிகக்குறைந்த செயல்பாடுகளையே மேற்கொள்ளும், சுவாசித்தல், இதயத்துடிப்பு என்று, மற்றபடி மீளா உணர்வுநிலைக்குச் சென்ற ஒருவரால், கண்களை திறத்தல், உடல் உறுப்புக்களை அசைத்தல், ஒலி எழுப்புதல் போன்ற செயல்களைச் செய்ய இயலாது. உயிர் இருந்தும் இறந்தநிலை.

(என்னை அந்நிலையில் வைத்து நினைத்துப் பார்க்கையில், மிகக்கடுமையானதொரு நிலையாக உணர்கின்றேன். கைகால்களைக் கட்டி நீருக்குள் தூக்கிப்போட்டால் எப்படியிருக்குமோ அப்படி. பாவம்தான் அந்நிலை நோயாளிகள். [தசாவதாரம் திரைப்படத்தில், நம்பியைக் கட்டி கடலுக்குள் தூக்கிப்போடும்பொழுது உங்களின் மனநிலை என்ன?])

பல்வேறு காரணங்களால் இந்த நிலை ஏற்படும் என்றாலும் அவற்றில் மூளையில் அடிபடுதல் மற்றும் மையநரம்பு மண்டலம் நோய்த்தாக்குதலுக்குள்ளாகுதல் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உள்ளவர்களை அவசர சிகிச்சைப்பிரிவில் வைத்தே கவனிப்பார்கள். பொதுவாக இந்நிலையில் இருந்து மீள்வது அரிது.

அதிசயப்படும்படியாக சிலர் இந்நிலையிலிருந்து சற்று முன்னேற்றம் கண்டு Vegetative State என்னும் நிலைக்கு முன்னேற்றமடைவர். இங்கு, கண்களைத் திறந்து மூடுதல் (உறங்கி விழிக்கும் சுழற்சி ஏற்படும்), முனகுதல், சிறு ஒலிகள் எழுப்புதல், கண்களில் நீர் வருமாறு அழுதல், மெலிதாக புன்னகைத்தல், முக அசைவுகள் காட்டுதல் என சிற்சில செயல்பாடுகள் நிகழும். இந்நிலையில் இருப்பவர்களை மருத்துவக்கண்காணிப்பில் வைத்திருக்கவேண்டிய அவசியமில்லை. வீட்டினர் கண்காணிப்பிலும், அரவணைப்பிலும் இருக்க அனுமதிப்பர். (வசூல் ராஜா MBBS திரைப்படம் நினைவிற்கு வரவேண்டுமே?)

ஆக, ஒருவர் மீளாஉணர்வுநிலையிலிருந்து மீண்டு(ம்) வருவார் என்பதை மருத்துவத்தால் அறுதியிடமுடியவில்லை. அப்படி வருவாராயின் அதனை, It's a Medical Miracle ! என்று திரைப்படங்களில் வரும் மருத்துவர் கூறுவது போல்தான் கூறவேண்டும். (திரைப்படங்களில் வரும் மருத்துவர் அனைவரும் ஏன் மூக்குக்கண்ணாடி அணிகின்றனர் தெரியுமா?) நாம் இன்னும் மூளையின் செயல்பாடுகளை முழுமையாக அறிந்தோமில்லை.

மேலோட்டத் தகவல்கள்தான், போதுமானதாக இருக்கும் எனக் கருதுகின்றேன். ஆழ்விபரங்களுக்கு இணையத்திலேயே நிறையக் கிடைக்கின்றன. தேடுவீர்கள் என நம்புகின்றேன்.

1 comment:

  1. ஏன் friends படம் பார்க்கலையா?

    ReplyDelete