Monday, January 19, 2015

தாவரங்கள் நீரை உறிஞ்சுவது எவ்வாறு?



தாவரங்கள் நீரை உறிஞ்சுவது எவ்வாறு?

அதற்கு முன் ஒரு மூன்று இயற்பியல் நிகழ்வுகள் குறித்துப் பார்த்துவிடுவோம்.

நீராவிப் போக்கு (Transpiration)
இதனைத் தாவரங்களுக்கு வியர்க்கின்றது என்று சொல்லலாமா? தாவரங்களின் தண்டு, மலர், வேர் குறிப்பாக இலைகள், இவற்றிலிருந்து வெளியேற்றப்படும் அல்லது இழக்கப்படும் நீரின் போக்கினையே நீராவிப் போக்கு என்கிறோம். இலைகளின் மேல் மற்றும் கீழ்பகுதிகளில் காணப்படும் நுண்துளைகள் (Stomata) (நமது வியர்வைத் துளைகள் போன்றதே) வழியாகவே நீர் வெளியேற்றப்படுகின்றது. அச்சமயத்திலேதான் காற்றிலுள்ள கரியமில வாயுவினையும் (Carbon di-oxide) ஒளிச்சேர்க்கைக்காக (Photosynthesis) அத்துளை வழியாக உட்கொள்கின்றது. இந்நீராவிப் போக்கானது, தாவரங்களைக் குளுமையாக வைத்துக்கொள்ளவும், அடியிலிருந்து நுனி வரைக்கும் நீர் மற்றும் சத்துமிக்க தாதுக்களைக் கடத்துவதற்கும் உறுதுணையாக உள்ளது.

சவ்வூடு பரவல் (Osmosis)
சவ்வூடு பரவல் அல்லது பிரசாரணம் (Osmosis) எனப்படுவது நீரழுத்தம் கூடிய கரைசல் (கரையத்தின் செறிவு குறைந்த கரைசல்) ஒன்றிலிருந்து, நீரழுத்தம் குறைந்த கரைசல் (கரையத்தின் செறிவு கூடிய கரைசல்) ஒன்றிற்கு தேர்ந்து உட்புகவிடும் மென்சவ்வு (semi-permeable membrane) ஒன்றின் ஊடாக நீர் மூலக்கூறுகள் பரவல் ஆகும். இது கரையம் அல்லது கரைபொருளை (solute) உட்செல்ல விடாது, கரைப்பானை (solvent) மட்டுமே தேர்ந்து உட்செல்ல விடும் மென்சவ்வினூடாக, கரைப்பானானது, ஆற்றல் இழப்பின்றி பரவும் (passive diffusion) ஒரு இயற்பியல் தொழிற்பாடாகும். இந்த சவ்வூடு பரவலின்போது வெளியேறும் ஆற்றலானது வேறு தொழிற்பாடுகளில் அல்லது உயிரணுவின் மற்ற நிகழ்வுகளில் பயன்படுத்தப் படலாம்.

சவ்வூடு பரவல் மூலம் இருவேறு செறிவுடைய கரைசல்களின் (solution) இடையே கரைப்பான் மூலக்கூறுகள் பரவுவதால், இரு கரைசல்களின் செறிவும் சமநிலைக்கு கொண்டு வரப்படும். இயல்பாக நிகழக் கூடிய இவ்வகை கரைப்பானின் பரவலைத் தடுக்க கொடுக்க வேண்டிய அழுத்தமே சவ்வூடு பரவல் அழுத்தம் எனப்படும்.
-(கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.)


தந்துகிப் பெயர்ச்சி (Capillary Action)
பொதுவாக நீரானது புவியீர்ப்பின் காரணமாக மேலிருந்து கீழ்நோக்கியே பயணிக்கும் என்பதை நாமறிவோம். நீர்மங்களின் ஒரு பண்பான இத்தந்துகிப் பெயர்ச்சி, நுண்துளைக் குழாய்களில் புவியீர்ப்பிற்கு எதிராக மேல்நோக்கிச் சற்று பயணிக்க முயலும்.

தெரிந்துகொண்டாயிற்றா? ஆக, நீரானது, மண்ணில் இருந்து சவ்வூடு பரவல் முறையில் தாவரங்களின் வேர்களின் மூலம் உட்பெறப்பட்டு, அங்கிருந்து தொடங்கும் நுண்ணிய குழாய்களில் தந்துகிப் பெயர்ச்சி முறையில் மேல்நோக்கிப் பயணித்து தாவரங்களின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்கின்றது. நீராவிப் போக்கும் இப்பயணத்தை எளிதாக்குகின்றது. நீராவிப்போக்கினால் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்ப நீரை இழந்த செல்களுக்கு அதன் அடுத்து உள்ள செல்களில்இருந்து நீர் தந்துகிப் பெயர்ச்சி முறையால் கடத்தப்படுகின்றது.

No comments:

Post a Comment