Monday, January 19, 2015

பூமியின் நிறை கூடியிருக்கின்றதா?


கேள்வி: முன்பிருந்த மக்கள் தொகை வேறு, இன்றைக்கிருக்கின்ற மக்கள் தொகை வேறு. அன்றைக்கிருந்த கட்டடங்கள் வேறு, இன்றைக்கிருக்கின்ற கட்டடங்கள் வேறு. அப்படியென்றால் பூமியின் மக்கள் தொகை மற்றும் கட்டடங்கள் அதிகரித்துள்ளதால் பூமியின் நிறை கூடியிருக்கின்றதா?

பதில்: நன்று கேட்டீர்கள். அபத்தக் கேள்விபோல் தெரிந்தாலும், அவசியமான கேள்வி.

புவியின் நிறை 5.972 செக்ஸ்டில்லியன் மெட்ரிக் டன்களாகும். அதாவது. 5972 போட்டு அதற்குப் பின் 18 சுழியன்களைப் போட்டுக்கொள்ளுங்கள். இது எப்பொழுதும் நிரந்தரமானதா? தினம் தினம் புதிது புதிதாக குழந்தைகள் பிறக்கின்றனவே, மிருகங்களும் பறவைகளும் பிறக்கின்றனவே, புதிது புதிதாக கட்டங்களும், கட்டுமானங்களும், வாகனங்களும் கட்டப்படுகின்றனவே... அவையெல்லாம் புவியின் நிறையைக் கூட்டாதா?

கூட்டாது... அவையெல்லாம் இங்கிருந்தே எடுக்கப்பட்டவைகள். புவியின் ஒரு பகுதியே மற்றொரு உருவாக ஆக்கப்படுகின்றன. அதனால் அவைகள் புவியின் நிறையைக் கூட்டாது. ஒரு குழந்தை உருவாகி அது உண்ணும் உணவுகள் இதே புவியிலிருந்துதான் பெறப்படுகின்றது. பின்னர், அதுவே கழிவாகவும் வேறு பல வெளியீடுகளாகவும் வெளியேற்றப்படுகின்றது.

ஆனால், புவியின் நிறையைக் கூட்டுவதற்கு வேறு சில நிகழ்வுகள் காரணமாகின்றன. அனுதினமும் புவியை வந்து மோதும் விண்கற்கள், சூரியப் புயல்கள் காரணமாக புவிக்கு வரும் கதிர் ஆற்றல்கள் இவையெல்லாம் புவியின் நிறையைக் கூட்டத்தான் செய்கின்றன. (E=MC^2யை நினைவில் கொள்ளுங்கள். ஆற்றல் நிறையாகவும் மாற்றப்படும்) 

அதே சமயம், நாம் விண்வெளிக்கு அனுப்பும் விண்கலங்கள் நம் புவியின் நிறையையும் குறைக்கும். ஆனால், எதுவாக இருந்தாலும், அவைகள் புவியின் ஒட்டுமொத்த நிறையைக் கணக்கில் கொள்ளும்போது.... மீச்சிறு மதிப்பாகத்தான் போகும்.

அதே சமயத்தில், சூரியனிலிருந்து வெளிப்படும் ஆற்றலானது, சூரியனின் நிறை குறிப்பிடுமளவிற்கு அதன் நிறை குறைந்து கொண்டு வருதை நமக்குத் தெரிவிக்கின்றது. இன்னும் 4.5 பில்லியன் வருடங்களில் அதன் நிறை கணிசமான அளவிற்குக் குறைந்து விடும், அதுதான் சூரியனின் இறப்பு என்று கணித்திருக்கின்றார்கள்.

படம் எடுக்கப்பட்ட தளம் : http://static2.businessinsider/.com/image/512e46e469bedd9265000001/here-are-the-1400-potentially-earth-ending-asteroids-circling-our-planet.jpg

No comments:

Post a Comment