Monday, January 19, 2015

கடல் ஏன் நீல நிறம்?



Krithika Krishna (July 12, 2012)
எனக்கு ஒரு சந்தேகம்....வானத்தோட நீல நிறம் நீரில் பிரதிபலிப்பதால் நீல நிறமாக இருக்கிறது...அப்படியானால் நம் மேலும் அல்லது செடி கொடிகளின் மீதும் நீல நிறம் பிரதிபலிக்காதா?? ஒரு வேளை தண்ணீருக்கு நிறம் இல்லாததால் வானத்தின் நிறத்தை உன் வாங்கிக்கொள்கிறது என்று வைத்துக்கொண்டாலும்.....சில சமயம், நாம் என்ன நிறத்தில் உடை அணிகின்றோமோ அது முகத்தில் பிரதிபலிக்கிறதே? அப்போ வானத்தில் உள்ள நீல நிறம் நம்மீது விழாதா?? பிரதிபலிக்காதா...கேள்வி அபத்தமான்னு தெரியல... இருந்தாலும் கேக்குறேன்...

பதில் :

வானத்தோட நீல நிறத்தைப் பிரதிபலிப்பதால் மட்டும் கடல் நீலநிறமல்ல...

நீயே பார்த்திருக்கலாம், சிறு குளம், குட்டை, அல்லது வாசலின் முன் ஒரு பாத்திரத்தில் வைக்கப்பட்ட நீர் இவையெல்லாம் நீல நிறத்தில் இருப்பதில்லை.

ஆனால் கடல் மட்டும் ஏன் நீல நிறம்?

வானின் வெளிச்சம், தண்ணீரில் கரைந்துள்ள துகள்களின் அடர்த்தி, கடலின் ஆழம், பார்வையாளரின் பார்வைக்கோணம் இவையெல்லாம் சார்ந்துதான் கடல் நிறமளிக்கும்.

சூரிய ஒளியானது (அதாவது வெண்மையான ஒளி...) கடல் நீரில் விழும்போது, சில வண்ணங்கள் உட்கிரகிக்கப்பட்டுவிடும். மற்ற வண்ணங்கள் தண்ணீரின் மூலக்கூறுகளில் மோதி சிதறடிக்கப்படும்.

அதாவது, சிவப்பு மற்றும் அகச்சிவப்பு கதிர்கள் உறிஞ்சப்பட்டுவிடும். நீலம் மற்றும் பச்சை வண்ணங்கள் மட்டும் பெரும்பாலும் சிதறடிக்கப்படும். இதன் காரணமாகவே பச்சை கலந்த நீலம் அல்லது நீல நிறத்தில் கடல் நீர் தோற்றமளிக்கின்றது.

இது போன்று ஒளிச்சிதறல் அடைய அந்த நீரின் ஆழம் குறைந்தது 10 அடி ஆழமாகவாவது இருக்க வேண்டும். கடலின் ஆழம் கூடக் கூட நீல நிறம் அடர்த்தியாகத் தெரியும்.

வானத்தின் நிறத்தையும் சேர்த்துப் பிரதிபலிக்கும். ஆனால் அதனால் மட்டும்தான் நீல நிறம் என்று சொல்ல முடியாது.

சரி இப்பொழுது, செடிகொடி மற்றும் மனிதர்களுக்கு வருவோம். இங்கும் அதே கதைதான். நிறம் என்பது ஒரு பொருளின் மேல் விழும் வெண்மை ஒளியில் (வெண்மை என்பது எல்லா நிறங்களின் தொகுப்பு) உட்கிரகிக்கப்படாமல் சிதறடிக்கப்படும் ஒளி ஆகும்.

அதாவது 7 நிறங்கள் (ஒரு பேச்சுக்கு VIBGYOR) கொண்ட ஒரு வெண்மை ஒளி ஒரு பொருளில் பட்டு அது பச்சை நிறத்தில் தெரிகின்றது என்றால் அந்தப் பொருள் பச்சை நிறத்தைத் தவிர மற்ற வண்ணங்களை உறிஞ்சிக்கொண்டது என்று பொருள்.

ஆக, உலகில் நாம் பார்க்கும் வண்ணங்கள் எல்லாம் உறிஞ்சப்படாமல் சிதறடிக்கப்பட்டு நம் கண்களை அடையும் ஒரு குறிப்பிட்ட அலைநீளங்கள் கொண்ட ஒளிக்கதிர்களே.

ஒரு பொருளின் நிறத்தை அப்படியே பிரதிபலிக்க வேண்டும் என்றால் அங்கு உட்கிரகிப்பு எதுவும் நடக்கக்கூடாது. நாம் அணியும் உடைகளின் நிறம் நம் முகத்தில் பிரதிபலிக்க வேண்டும் என்றால், ஒளியானது அந்த உடையின் மேல் பட்டு உடையின் நிறம் பிரதிபலிக்கப்பட்டு அது நம் முகத்தில் மோதி, நம் முகமும் அதனை அப்படியே பிரதிபலித்தால் மட்டுமே சாத்தியம்.

அது எப்பொழுது சாத்தியம்... நாம் சுத்தமாகக் குளித்து விட்டு, பவுடர் போட்டிருந்தால் மட்டுமே. அல்லது வெள்ளைத் தோல் கொண்டவனாக இருந்தால் சாத்தியம். கருப்புத் தோலில், மெலனின் என்றொரு நிறமி உண்டு. அது எல்லாவற்றையும் உறிஞ்சிக்கொண்டு Brown வண்ணத்தைத்தான் வெளிவிடும். மெலனினின் அடர்த்திக் கூடக் கூட கருமை நிறம்தான் மிஞ்சும். அதாவது எதுவுமே பிரதிபலிக்கப்படாது...  

No comments:

Post a Comment