Monday, January 19, 2015

கொடி அசைந்ததும் காற்று வந்ததா, காற்று வந்ததும் கொடி அசைந்ததா?


புவியில் காற்று எவ்வாறு உருவாகி வீசுகிறது என்று பார்க்கலாமா?

கொடி அசைந்ததும் காற்று வந்ததா, காற்று வந்ததும் கொடி அசைந்ததா? என்ற பாடல் நமக்கு தெரியும்.

ஆனால் விடை?

காற்று வீசுதல் என்பது காற்றின் அசைவை, காற்றுச் சலனத்தைக் குறிக்கின்றது. நம் புவியைச் சுற்றி வளி(காற்று)மண்டலம் இருப்பதை நாம் அறிவோம். அக்காற்றானது புவியின் மீது ஒரு அழுத்தத்தைத் (Pressure) தருகின்றது. அதனையே நாம் வளிமண்டல அழுத்தம் (Atmospheric Pressure) என்கின்றோம்.

சிலபல காரணங்களால் அவ்வழுத்தமானது புவியெங்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஒரு காரணமானது, சூரியன் தனது கதிர்களால் காற்று மண்டலத்தைச் சூடாக்குகின்றது. வெப்பக் காற்றானது மிக இலேசானது என்றும் அது மேல்நோக்கிச் செல்லும் தன்மையானது என்பதையும் நாமறிவோம். அப்படி மேல்நோக்கிச் செல்லுங்கால் கீழே ஒரு வெற்றிடம் உருவாகும். அவ்வெற்றிடத்தை நிரப்ப சுற்றியுள்ள காற்று அவ்விடம் நோக்கிச் செல்லும். இந்த அசைவையே நாம் காற்று வீசுகிறது என்கிறோம்.

ஆக, காற்றழுத்த வேறுபாடுகளே காற்று வீசுவதற்குக் காரணம் எனக் கொள்ளலாம். ஆயினும் நம் புவியின் சுழற்சியும் கூட ஒரு மிகப்பெரிய காரணமாகும். இன்னும் சற்றுச் சிந்தித்துப் பார்ப்போமானால் புயல் உருவாவதற்கான காரணத்தையும் நாமே அவதானிக்கலாம்.

அனுபவம் : கடற்காற்றும் (Sea Breeze), நிலக்காற்றும் (Land Breeze) ஒரு அனுபவப் பாடமாகக் கொள்ளலாம். கடற்கரையோரம் நாம் வசிப்பவராக இருந்தால் இதனை உணர்ந்திருப்போம். கோடைக்காலத்தில் பகலில் நிலப்பகுதியானது கடற்பகுதியைவிட எளிதில் சூடாகி, நிலப்பகுதியில் குறைந்த காற்றழுத்தம் உருவாகும். அதனைச் சமன் செய்ய கடற்பகுதியிலிருந்து காற்று வீசும், இதனையே கடற்காற்று என்கிறோம்.

எளிதில் சூடாகும் நிலப்பகுதி எளிதிலும் குளிர்ந்து விடும். (நாமறிந்த Kirchoff's Law of Thermal Radiation-யை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்)

இரவில் நிலப்பகுதி எளிதில் குளிர்ந்து விட, கடற்பகுதியில் வெப்பம் இன்னும் இருப்பதால், நிலப்பகுதியிலுள்ள அடர்த்தி அதிகமான காற்றானது கடலை நோக்கி நகரும். இதனையே நிலக்காற்று என்கிறோம்.

மிகச் சுருக்கமாக, கூடியவரை நுணுக்கமான அறிவியற் சொற்களைத் தவிர்த்து, பொதுவான வகையிலேயே தந்துள்ளேன். இன்னும் உள்ளே சென்றோமானால், ஆச்சர்யப்படுமான தகவல்கள் கிடைக்கும். முயன்றுதான் பாருங்களேன்.

இப்பொழுது சொல்லுங்கள், கொடி அசைந்ததும் காற்று வந்ததா, காற்று வந்ததும் கொடி அசைந்ததா?

No comments:

Post a Comment